‘மகாபாரதம்’ படத்தின் பணிகளைத் தொடங்கும் ஆமிர்கான்

‘மகாபாரதம்’ படத்தின் பணிகளைத் தொடங்கும் ஆமிர்கான்
Updated on
1 min read

‘மகாபாரதம்’ படத்துக்கான பணிகளை இந்த ஆண்டே தொடங்கவுள்ளார் ஆமிர்கான்.

இந்தியாவில் ‘மகாபாரதம்’ கதையினை படமாக்க பல்வேறு இயக்குநர்கள் முயற்சி செய்தார்கள். ஆனால், எதுவுமே திட்டமிட்டப்படி நடைபெறவில்லை. சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், தனது வாழ்நாள் குறிக்கோள் என்னவென்றால் ‘மகாபாரதம்’ கதையினை படமாக்குவது தான் என்று ஆமிர்கான் குறிப்பிட்டு இருந்தார்.

தற்போது அதற்கான பணிகளை இந்த ஆண்டே தொடங்க இருப்பதாக மற்றொரு பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார் ஆமிர்கான். அப்பேட்டியில் ‘மகாபாரதம்’ குறித்து “எனக்கு இருக்கும் ஒரே லட்சியம், இந்த வருடமே ‘மகாபாரதம்’ படத்தின் பணிகளை ஆரம்பிக்க வேண்டும் என்பது தான். அதன் படப்பிடிப்பு தொடங்க சில காலம் ஆகும். ஏனென்றால் முதலில் படத்தினை எழுதி முடிக்கவே சில மாதங்கள் ஆகும்.

பெரிய கதை என்பதால் பல பாகங்களாக எடுக்க திட்டமிட்டு இருக்கிறேன். ஒவ்வொரு பாகத்துக்கும் யார் பொருத்தமான நடிகர் என்பதை வைத்து தான் நடிகர்கள் தேர்வு இருக்கும். நான் நடிப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால், ‘லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்’ பாணியில் ஒவ்வொரு பாகத்துக்கு ஒவ்வொரு இயக்குநர் என்று இருந்தால் மட்டுமே சீக்கிரமாக படமாக்க முடியும்.

இல்லையென்றால் ஒரு பாகத்தை முடித்துவிட்டு தான் அடுத்த பாகம் தொடங்க முடியும். இப்போதைக்கு நானே படத்தை தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் ஆமிர்கான்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in