நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் தற்கொலைதான் - சிபிஐ இறுதி அறிக்கை தாக்கல்

நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் தற்கொலைதான் - சிபிஐ இறுதி அறிக்கை தாக்கல்
Updated on
1 min read

பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், தோனியின் பயோபிக்கான ‘எம்எஸ் தோனி: தி அன்டோல்டு ஸ்டோரி’, ‘கேதார்நாத்’, ‘சிச்சோரே’ என சில படங்களில் நடித்துள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி, மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்துகிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது. அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த மரணம் இந்தியா முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்த தற்கொலைக்குப் போதைப் பொருள் காரணம் என்றும் செய்திகள் வெளியாயின.

ஆனால், அவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறிய சுஷாந்த் சிங்கின் தந்தை கே.கே.சிங், தற்கொலைக்குத் தூண்டியதாக நடிகையும் சுஷாந்தின் காதலியுமான ரியா சக்கரவர்த்தி மீது பாட்னாவில் வழக்குத் தொடர்ந்தார். நடிகை ரியாவும் சுஷாந்தின் சகோதரி மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்குகளை சிபிஐ விசாரித்து வந்தது.

இந்நிலையில், சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ, இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. அதில், சுஷாந்த் சிங் மரணம் கொலை என்பதைச் சந்தேகிக்க எந்த அறிவியல் ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும் மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

அதோடு, இந்த மரணத்தில் நடிகை ரியா சக்கரவர்த்திக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல்கள் தவறானவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in