காப்புரிமை சிக்கல்: ‘ராமாயணம்’ படப்பிடிப்பு நிறுத்தம்

காப்புரிமை சிக்கல்: ‘ராமாயணம்’ படப்பிடிப்பு நிறுத்தம்
Updated on
1 min read

ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் நடிப்பில் ராமாயணக் கதை திரைப்படமாக உருவாகிறது. நிதேஷ் திவாரி இயக்குகிறார். ரகுல் ப்ரீத் சிங், லாரா தத்தா, சன்னி தியோல் என பலர் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் படம் உருவாகிறது.

இதை முதலில் அல்லு மன்டேனா மீடியா வென்ச்சர்ஸ் எல்எல்பி, நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டூடியோஸ், அல்லு அரவிந்த் இணைந்து தயாரிப்பதாக இருந்தது. கருத்து வேறுபாடு காரணமாக மூவரும் பிரிந்தனர். இதனால் நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டூடியோஸ் நிறுவனம் நடிகர் யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸுடன் இணைந்து இதைத் தயாரிக்கிறது.

இந்தப் படம் 3 பாகங்களாக உருவாக இருப்பதாக முதலில் கூறப்பட்டது. இப்போது, 2 பாகங்களாகத் தயாராகிறது என்கின்றனர். இதன் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வந்தது. இந்தப் படத்துக்கான காப்புரிமை தொடர்பாக, தயாரிப்பாளர் மது மண்டேனா, நமித் மல்ஹோத்ராவுக்கு நோட்டீஸ் அனுப்பினார். படத்தின் ஸ்கிரிப்ட் உரிமை தங்களிடம் இருப்பதாகவும், வேறு யாரும் அதைப் பயன்படுத்தினால், அது காப்புரிமை மீறல் என்றும் அந்த நோட்டீஸில் எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இந்தக் காப்புரிமை பிரச்சினை பேசி தீர்க்கப்பட்ட பின் ஷூட்டிங் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in