Published : 29 Jan 2024 11:35 AM
Last Updated : 29 Jan 2024 11:35 AM

‘அனிமல்’ ஓர் ஆரோக்கியமான விவாதத்தை முன்னெடுத்துள்ளது: ரன்பீர் கபூர் 

மும்பை: ‘அனிமல்’ திரைப்படத்தில் மோசமான ஆணாதிக்க கருத்துகள் இடம்பெற்றுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இப்படம் சமூகத்தில் ஒரு ஆரோக்கியமான விவாதத்தை முன்னெடுத்துள்ளதாக நடிகர் ரன்பீர் கபூர் தெரிவித்துள்ளார்.

‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா, அடுத்து இயக்கிய படம் ‘அனிமல்’. இதில் ரன்பீர் கபூர் நாயகனாகவும், ராஷ்மிகா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். அனில் கபூர், பாபி தியோல், சுரேஷ் ஓபராய் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். மனன் பரத்வாஜ், விஜால் மிஸ்ரா, ஜானி, ஹர்ஷவர்தன் ராமேஸ் ஆகியோர் இசையமைத்துள்ளனர். டி- சிரீஸ், சினி ஒன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு அமீத் ராய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கடந்த டிசம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், பாக்ஸ் ஆஃபீஸில் ரூ.900 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. அண்மையில் இப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. படம் ஓடிடியில் வெளியானது முதலே இப்படத்தில் இடம்பெற்றுள்ள நச்சுத்தன்மை கொண்ட ஆணாதிக்க கருத்துகள் குறித்து பலரும் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

இந்த நிலையில், இந்த விமர்சனங்கள் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் ரன்பீர் கபூர் பேசியுள்ளார். அதில் அவர், “சமூகத்தில் நிலவும் நச்சுத்தன்மை கொண்ட ஆணாதிக்கம் குறித்து ‘அனிமல்’ படம் ஓர் ஆரோக்கியமான விவாதத்தை முன்னெடுத்துள்ளது. இது மிகவும் நல்ல விஷயம். காரணம் சினிமா என்பது குறைந்தபட்சம் ஒரு உரையாடலை ஏற்படுத்த வேண்டும். ஏதேனும் தவறு நடக்கும்போது, அது தவறு என்று நாம் காட்டாவிட்டால், சமூகத்தில் உரையாடல் தொடங்கும்வரை நம்மால் அந்த தவறை உணரவே முடியாது” என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x