“கனவு கண்ட வாழ்க்கையை வாழ்கிறேன்” - ஷாருக்கானுக்கு நன்றி தெரிவித்த அட்லீ

“கனவு கண்ட வாழ்க்கையை வாழ்கிறேன்” - ஷாருக்கானுக்கு நன்றி தெரிவித்த அட்லீ
Updated on
1 min read

‘ஜவான்’ பிரிவ்யூ வீடியோவுக்கு நடிகர் ஷாருக்கான் வாழ்த்து தெரிவித்த நிலையில், அதற்கு படத்தின் இயக்குநர் அட்லீ நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.

‘பிகில்’ படத்துக்குப் பிறகு அட்லீ இயக்கி வரும் ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கான் நடித்துள்ளார். இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மேலும் தீபிகா படுகோன், சஞ்சய் தத் ஆகியோர் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படம் வரும் செப்டம்பர் 7-ம் தேதி வெளியாகிறது.

இப்படத்தின் ‘பிரிவ்யூ’ கடந்த ஜூலை 10 அன்று வெளியானது. ட்விட்டரில் இயக்குநர் அட்லீ பகிர்ந்திருந்த பிரிவ்யூ வீடியோவை மேற்கோள்காட்டி நடிகர் ஷாருக்கான், “சார்...மாஸ்... எல்லாவற்றிற்கும் நன்றி” என பதிவிட்டிருந்தார். இதற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள இயக்குநர் அட்லீ, “அரசர்களின் கதைகளை கேட்டு நிஜத்தில் அப்படியான ஒருவருடன் பயணம் செய்வது வரை நான் கனவு கண்ட வாழ்க்கையை வாழ்கிறேன் என நினைக்கிறேன்.

இந்தப் படம் என்னுடைய எல்லைக்கு என்னை கொண்டு சென்றது. இந்தப் பயணத்தில் விலைமதிக்க முடியாத அனுபவங்களைப் பெற்றேன். சினிமா மீதான உங்கள் ஆர்வத்தையும், கடின உழைப்பையும் கடந்த 3 வருடங்களாக உன்னிப்பாக கவனித்து வந்த எனக்கு அது மிகப் பெரிய உத்வேகம் அளித்தது. லவ் யூ சார். இந்த சிறப்பான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததற்கு மொத்த படக்குழு சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in