

அரவிந்த்சாமி, மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் நடித்து கடந்த மாதம் வெளியான படம் ‘ரெண்டகம்’. மலையாளத்தில் ‘ஒட்டு’ என்ற பெயரில் வெளியான இந்தப் படத்தை டி.பி. பெல்லினி இயக்கி உள்ளார். இதன் கதை தன்னுடையது என்று மோகன்ராஜாவிடம் இணை இயக்குநராக பணியாற்றிய ஆர்.கிஷோர்குமார், இயக்குநர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள புகாரில்,‘‘இந்தக் கதையை ‘ஜாவா’என்ற பெயரில், எழுத்தாளர் சங்கத்தில் 2018-ம்ஆண்டு பதிவு செய்தேன். பிறகு நடிகர்அரவிந்த்சாமியிடம் கதையை சொன்னேன். அவர் கேட்டுக் கொண்டதால் முழுக் கதையையும் அவருக்கு மெயிலில் அனுப்பினேன். அதைப் படமாக்குவதற்காகத் தொடங்கிய வேலை, கரோனாவால் தடைபட்டது. இந்நிலையில் என் கதையை திருடி, மலையாளத்தில் ‘ஒட்டு’, தமிழில் ‘ரெண்டகம்’ என்ற பெயரில் படத்தை உருவாக்கி விட்டனர். இதனால் என் எதிர்காலம் குறித்து மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறேன். இதற்கு நியாயம் வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம், மும்பையில் உள்ள திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்திலும் புகார் அளித்துள்ளார். இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.