

சென்னை: மருத்துவ சிகிச்சைக்காக டி.ராஜேந்தர் இன்று அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார்.
நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தருக்கு கடந்த மாதம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், இதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பதை கண்டறிந்தனர். வயிற்றுப் பகுதியில் ரத்தக் கசிவு இருப்பது தெரியவந்து, அதற்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவமனைக்கு முதல்வர் ஸ்டாலின் சென்று டி.ராஜேந்தரை சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்த நிலையில், வயிற்றுப் பகுதியில் ஏற்பட்டுள்ள ரத்தக் கசிவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை பெறுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அவரது மகனான நடிகர் சிம்பு இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டு, இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.
இந்நிலையில், டி.ராஜேந்தருக்கு அமெரிக்காவில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இதற்காக அவர் இன்று இரவு அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார். அவரது குடும்பத்தினரும் உடன் செல்கின்றனர்.