நீங்கள் நடிகரென்று நினைத்தேனே: தனுஷுக்கு பாலிவுட் இயக்குநர் புகழாரம்
'கர்ணன்' திரைப்படத்தில் தனுஷின் நடிப்பைப் புகழ்ந்து பிரபல பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் ட்வீட் செய்துள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், ரஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'கர்ணன்'. தாணு தயாரிப்பில் வெளியாகியுள்ள இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
ஏப்ரல் 9-ம் தேதி வெளியான இந்தப் படம், தனுஷ் நடிப்பில் வெளியான படங்களில், முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை நிகழ்த்தியது. சில வாரங்கள் திரையரங்கில் வெற்றிகரமான ஓட்டத்துக்குப் பின் தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலையின் தீவிரப் பரவலால் திரையரங்குகள் மூடப்பட்டன.
இந்நிலையில் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் மே 14ஆம் தேதி அன்று 'கர்ணன்' வெளியானது. திரையரங்க வெளியீட்டில் படத்தைத் தவறவிட்ட பலரும் தற்போது படத்தைப் பார்த்து தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
'ராஞ்சனா' திரைப்படத்தின் மூலம் தனுஷை இந்தியில் அறிமுகம் செய்த இயக்குநர் ஆனந்த் எல்.ராயும், தற்போது 'கர்ணன்' படத்தைப் பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.
''அற்புதம், அட்டகாசம். 'கர்ணன்' என்கிற அனுபவத்தை இப்படித்தான் விவரிக்க முடியும். மாரி செல்வராஜ், என்னே ஒரு கதைசொல்லி நீங்கள். உங்கள் எண்ணங்களை திரையில் நீங்கள் தீட்டிய விதத்துக்கு உங்களை வணங்குகிறேன். தனுஷ், நீங்கள் ஒரு மாயவித்தைக்காரர். அதை நீங்கள் என்னிடம் சொல்லியிருக்க வேண்டும். நான் உங்களை நடிகர் என்று நினைத்தேன்'' என்று ஆனந்த் எல்.ராய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தற்போது தனுஷ், அக்ஷய் குமார் நடிக்கும் 'அத்ரங்கி ரே' திரைப்படத்தையும் ஆனந்த் எல்.ராய் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
