

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு இணைய வழி மருத்துவமனை நிர்வாக பயிற்சி வழங்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தாட்கோ மற்றும் அப்போலோ மெட்ஸ்கில்ஸ் நிறுவனம் சார்பில், இளங்கலை நர்சிங் முடித்த சென்னையை சேர்ந்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய இணையவழி மருத்துவமனை நிர்வாக பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதற்கான செலவீனத்தை தாட்கோ ஏற்றுக் கொள்கிறது.
இந்த பயிற்சியானது முதல் 2 வாரங்களுக்கு இணையவழியாகவும், அடுத்த 4 வாரங்களுக்கு அப்போலோ மருத்துவமனைகள் அல்லது அப்போலோ தொடர்புடைய பிற மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு பயிற்சியாகவும் வழங்கப்படும். பயிற்சி காலங்களில் மாணவர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத் தொகையும், பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் அப்போலோ மருத்துவமனைகளிலும், அது தொடர்புடைய முன்னணி மருத்துவமனைகளிலும் வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
இப்பயிற்சிக்கு, 2022, 2023, 2024 மற்றும் 2025-ம் ஆண்டுகளில் இளங்கலை மற்றும் முதுகலை அறிவியல் பட்டப்படிப்பில் நர்சிங் முடித்த மாணவர்கள், கல்லூரிகளில் இறுதியாண்டு படித்து வரும் 20 முதல் 25 வயதுக்குட்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து பங்கேற்கலாம். இத்துடன் அப்போலோ மெட்ஸ்கில்ஸ் நிறுவனத்தால் நடத்தப்படும் ஆன்லைன் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் ஃபைன் எனப்படும் செவிலியர் பயிற்சியையும் பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.