Published : 06 Jul 2022 04:25 AM
Last Updated : 06 Jul 2022 04:25 AM

சேலம், ஈரோடு உட்பட 11 மாவட்டங்களுக்கான அக்னிபாதை திட்ட ஆள்சேர்க்கை முகாம்: அவிநாசியில் செப்.20-ல் தொடக்கம்

கோவை

அக்னிபாதை திட்டத்தின் கீழ் சேலம், நாமக்கல், ஈரோடு உட்பட 11 மாவட்டங்களுக்கான ஆள்சேர்ப்பு முகாம் அவிநாசியில் வரும் செப்டம்பர் 20-ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதற்கான இணையவழிப் பதிவு நேற்று தொடங்கியது.

ராணுவம், கடற்படை, விமானப் படையில் இளைஞர்கள் சேர அக்னிபாதை என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. 17.5 முதல் 23 வரையிலான வயதுள்ள இருபாலரும் முப்படைகளில் சேரலாம். அனைவரும் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் பணியில் நீடிப்பார்கள்.

இத்திட்டத்தின் கீழ் ஆள்சேர்க்கை பணிகள் தற்போது தொடங்கியுள்ளன.

அதன்படி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தருமபுரி, ஈரோடு, மதுரை, நாமக்கல், நீலகிரி, சேலம், தேனி, கிருஷ்ணகிரி ஆகிய 11 மாவட்டங்களைச் சேர்ந்த ஆண்களுக்கான ஆள்சேர்க்கை முகாம் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகேயுள்ள டீ பப்ளிக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வரும் செப்டம்பர் 20-ம் தேதி தொடங்கி அக்டோபர் 1-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதில், அக்னிபாதை திட்டத்துக்கான பொதுப் பணி, டெக்னிக்கல், ட்ரேட்ஸ்மேன் (10-ம் வகுப்பு தேர்ச்சி), ட்ரேட்ஸ்மேன் (8-ம் வகுப்பு தேர்ச்சி), கிளர்க் மற்றும் ஸ்டோர் கீப்பர் (டெக்னிக்கல்) பிரிவுகளில் ஆள்சேர்க்கை நடைபெறவுள்ளது. வயது தகுதி, கல்வித்தகுதி மற்றும் பிற விவரங்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த ஆள்சேர்ப்பு முகாமுக்கான இணையவழிப் பதிவு நேற்று தொடங்கியுள்ளது. ஆள்சேர்க்கை முகாமில் பங்கேற்க விரும்புவோர் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை joinindianarmy.nic.in என்ற இணைய முகவரியில் சென்று பதிவு செய்யலாம். பதிவு செய்தவர்களுக்கு ஆள்சேர்க்கை முகாமுக்கான அனுமதிக் கடிதம் ஆகஸ்ட் 14-ம் தேதிக்கு பிறகு அனுப்பி வைக்கப்படும், என கோவையில் உள்ள ராணுவத்துக்கான ஆள்சேர்க்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x