

சென்னை: வேலைவாய்ப்பற்ற திருநங்கை, திருநம்பியருக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் வரும் ஜூலை 11-ம் தேதி நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட சமூக நலத் துறை சார்பில் வேலையற்ற திருநங்கை, திருநம்பியருக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் ஜூலை 11-ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. சென்னை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காலை 10 முதல் மதியம் 2 மணிவரை நடைபெறும் முகாமில் 50-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
இதில் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகள், ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த திருநங்கை, திருநம்பியர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்து கலந்துகொள்ளலாம். அதேபோல் https://forms.gle/ZZHqE7HF4ef6AjCx9 என்ற இணையவழி படிவத்திலும் தங்களது விவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முகாமில் கலந்துகொள்ளும் வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலை தேடும் திருநங்கை, திருநம்பிகளும் அதற்காக கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. வேலைவாய்ப்பற்ற திருநங்கை மற்றும் திருநம்பிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பயனடையுமாறு சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.