வெல்டர், ஃபிட்டர் உள்ளிட்ட பணிகளுக்கு மலேசியாவில் வேலைவாய்ப்பு: சென்னையில் அக்.4, 5-ல் நேர்காணல்

வெல்டர், ஃபிட்டர் உள்ளிட்ட பணிகளுக்கு மலேசியாவில் வேலைவாய்ப்பு: சென்னையில் அக்.4, 5-ல் நேர்காணல்
Updated on
1 min read

சென்னை: மலேசியாவில் வெல்டர், ஃபிட்டர், எலெக்ட்ரீசியன் உள்ளிட்ட பணிகளுக்கு தகுதிவாய்ந்த நபர்கள் தேவைப்படுகின்றனர். சென்னை கிண்டியில் இதற்கான நேர்காணல் அக்டோபர் 4, 5-ம் தேதிகளில் நடைபெறுகிறது.

இதுகுறித்து தமிழக அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மலேசியாவில் பணியாற்ற வெல்டர், பைப் ஃபிட்டர், ரிக்கர், கிரைண்டர், பைப்பிங் ஃபோர்மேன், பைப்பிங் மேற்பார்வையாளர், டேங்க் ஃபிட்டர், டேங்க் ஃபோர்மேன், உதவி ஃபிட்டர், எலெக்ட்ரீசியன், பிளானிங் பொறியாளர், தரக் கட்டுப்பாட்டு ஆய்வாளர் ஆகிய பணிகளுக்கு தகுதிவாய்ந்த நபர்கள் தேவைப்படுகின்றனர்.

குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு கல்வித் தகுதியுடன் 5 ஆண்டு பணி அனுபவம் அவசியம். மாதாந்திர ஊதியத்துடன் உணவு, விசா, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவையும் வழங்கப்படும்.

சென்னை கிண்டி திருவிக தொழிற்பேட்டையில் (கிண்டி ரயில் நிலையம் எதிரே) உள்ள அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் இந்த பணிகளுக்கான நேர்காணல் அக்டோபர் 4, 5-ம் தேதிகளில் (வெள்ளி,சனி) காலை 9 மணிக்கு நடைபெறும். நேர்காணலுக்கு வரும்போது சான்றிதழ்கள், விண்ணப்பம், பாஸ்போர்ட் அசல், நகல், ஆதார் நகல், புகைப்படம் ஆகியவற்றை தவறாமல் கொண்டுவர வேண்டும்.

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவோர் விசா கிடைத்த பிறகு, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்துக்கு சேவை கட்டணமாக ரூ.36,400 செலுத்த வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 9566239685 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in