

சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களிலும், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து வரும் செப்.27-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்தவுள்ளன. கிண்டி, ஆலந்தூர் சாலையில் ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணிமுதல் மதியம் 2 மணிவரை நடைபெற உள்ளது.
இம்முகாமில் 8, 10,12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டம் ஆகிய கல்வித் தகுதியை உடைய அனைவரும் பங்கேற்கலாம். இம்முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று பணிக்காலியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய உள்ளன.
இம்முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும்இளைஞர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. வேலையளிக்கும் நிறுவனங்களும்,வேலை தேடும் இளைஞர்களும் இம்முகாமில்பங்கேற்க எந்தவித கட்டணமும் இல்லை. இம்முகாமில் பங்கேற்கும் வேலை நாடுநர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் தங்கள் விவரங்களை தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் www.tnprivatejobs.tn.gov.in பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.