ஐஆர்சிடிசி புதிய வலைதளம் எப்படி? - எளிய அம்சங்களும், 13 குறிப்புகளும் | IRCTC’s new website

ஐஆர்சிடிசி புதிய வலைதளம் எப்படி? - எளிய அம்சங்களும், 13 குறிப்புகளும் | IRCTC’s new website
Updated on
3 min read

ஐஆர்சிடிசி எனப்படும் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகத்தின் மேம்படுத்தப்பட்ட, நவீனமாக்கப்பட்ட, பயணிகள் எளிதாகப் பயன்படுத்தும் வகையிலான புதிய வலைதளத்தை அறிமுகம் செய்துள்ளது ரயில்வே துறை. இதன் சிறப்பு அம்சங்களைப் பார்ப்போம்.

ஐஆர்சிடிசி தளத்தில் டிக்கெட் முன்பதிவின்போது ஏற்படும் சர்வர் கோளாறுகள், கேப்ச்சா பதிவு செய்வது, அதிகமான ஓடிபி எண்கள் கேட்பது, திடீரென வலைதளம் இயங்காமல் தேங்கி நிற்பது போன்ற குறைகள் அடிக்கடி ஏற்பட்டன. இதனால், பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, குறிப்பாக தட்கல் டிக்கெட் முன்பதிவின்போது கடும் சிரமங்களைச் சந்தித்தனர்.

சில நேரங்களில் ஓடிபி எண்கள் வருவதில் தாமதம், கேப்ச்சா பதிவு செய்வதில் சிக்கல் போன்றவற்றை சந்தித்தனர், பல நேரங்களில் பணம் டெபிட் செய்யப்பட்டு, வலைதளம் டிக்கெட் முன்பதிவு செய்யாமல் இருக்கும் சம்பவங்கள் நடந்தன. இது பயணிகளுக்கு மிகுந்தமன உளைச்சலைக் கொடுத்தது. இழந்த பணத்தை திரும்பப் பெறுவதிலும் ஏராள தாமதமும், பணம் வராமல் இருந்த சம்பவங்களும் நடந்தன. இது குறித்து ஏராளமான புகார்கள் ஐஆர்சிடிசிக்கு வந்தன.

இவற்றை சரிசெய்து, அதிவிரைவாக டிக்கெட் முன்பதிவு செய்யவும், தேவையற்ற விளம்பரங்கள், அனிமேஷன்களை நீக்கியும், பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தியும், குறைவான கேப்ச்சா, ஓடிபி வசதிகளைக் கொண்ட மேம்படுத்தப்பட்ட வலைதளத்தை அறிமுகம் செய்துள்ளதாக ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.

என்ன சொல்கிறது ஐஆர்டிசி?

ஐஆர்சிடிசி அதிகாரிகள் கூறுகையில், “மேம்படுத்தப்பட்ட புதிய ஐஆர்சிடிசி ‘பீட்டா வெர்ஷன்’ வலைதளத்தை அறிமுகம் செய்கிறோம். இதில் குறிப்பிடத்தகுந்த ஒரு விஷயம் என்னவென்றால், நிமிடத்துக்கு நாடு முழுவதிலும் இருந்து 1.50 லட்சம் டிக்கெட்டுகளை ஒரே நேரத்தில் முன்பதிவு செய்ய முடியும். அதற்கு ஏற்றார்போல் சர்வர்கள் வலுப்படுத்தப்பட்டு, வலைதளத்தின் வேகம் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

கடும் டிராஃபிக் நேரம் எனச் சொல்லப்படும் பண்டிகை முன்பதிவு நாட்கள், தட்கல் முன்பதிவு, வார இறுதிநாட்கள் முன்பதிவு, நீண்ட விடுமுறை நாட்கள் முன்பதிவு ஆகிய காலகட்டங்களில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பல்வேறு சிக்கல்களை பயணிகள் சந்தித்திருக்கலாம். அவை அனைத்தும் சரிசெய்யப்பட்டதால், இனிமேல் பயணிகள் எளிதாக வலைதளத்தை கையாண்டு விரைந்து டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

பிஆர்எஸ் எனப்படும் பயணிகள் முன்பதிவு முறையின் கட்டமைப்பும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நிமிடத்துக்கு 40 லட்சம் விசாரணைகள் வரும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தற்போது 4 லட்சம் விசாரணைகள் மட்டுமே வரும் நிலையில், அது 10 மடங்கு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய வசதியால், வலைதளத்தின் வேகம் திடீரெனக் குறைவது தவிர்க்கப்படும், டிராஃபிக் நேரங்களில் முன்பதிவு செய்வதில் சிரமங்களும், தவறுகள் ஏற்படுவதும் தவிர்க்கப்படும்” எனத் தெரிவித்தனர்.

புதிய வசதிகள் என்னென்ன?

1. ஐஆர்டிசியின் முந்தைய வலைதளத்தில் டிக்கெட் முன்பதிவின்போது, நமக்கான இருக்கை தானியங்கி முறையில் அதுவே வழங்கப்படும். ஆனால், புதிய முறையில் யாருக்கு எந்த இருக்கை தேவை என்பதை நாமே தேர்வு செய்யலாம். உதாரணமாக, முதியோர் இருந்தால் கீழ் படுக்கையை முன்னுரிமை கொடுத்து நாமே தேர்ந்தெடுக்கலாம்.

2. டிக்கெட் கட்டண காலண்டர் என்ற வசதி புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இதன்படி, நாம் டிக்கெட் முன்பதிவு செய்யும் முன், வெவ்வேறு தேதிகளில் டிக்கெட் விலை என்ன, நாம் செல்லும் தேதியில் டிக்கெட் விலை என்ன என்று ஒப்பீடு செய்து முன்பதிவு செய்யலாம். உதாரணமாக, விடுமுறை நாட்களில் டிக்கெட் விலை அதிகமாக இருக்கும். ஆனால், அதுவே விடுமுறை முடிந்தபின் அதே ரயிலில் டிக்கெட் விலை கணிசமாகக் குறைந்திருக்கும். இதை ஒப்பிட்டு பயணத்தை மாற்றி அமைக்க முடியும், பயணிகளுக்கும் குறைந்த டிக்கெட் செலவு குறித்து அறிந்து செலவு குறைவாக பயணிக்க முடியும்.

3. முன்பதிவு செயல்முறையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது ரயிலில் இருக்கும் ஏசி முதல்வகுப்பு, 2-ம்வகுப்பு ஏசி, 3-ம்வகுப்பு ஏசி, சேர்கார் ஏசி, சாதாரண இருக்கை, படுக்கை வசதி ஆகியவற்றில் எத்தனை இடங்கள் காலியாக இருக்கின்றன, எந்தெந்த பெட்டியில் எத்தனை இடங்கள் காலியாக உள்ளன குறித்த விவரங்கள் வரும். அதைப் பார்த்து நமக்கு எத்தனை இடங்கள் தேவை என்பதையும், எந்தப் படுக்கை, இருக்கை தேவை என்பதையும் தேர்ந்தெடுத்து முன்பதிவு செய்யலாம்.

4. நாடு முழுவதிலிருந்தும் பயணிகள் எளிதாக டிக்கெட் முன்பதிவு செய்யவும், புரிந்துகொள்ளவும் பல்வேறு பிராந்திய மொழிகள் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

5. மாணவர்கள், மாற்றுத் திறனாளி பயணிகள், நோயாளிகள், முதியோர்கள் ஆகியோர் டிக்கெட் முன்பதிவின்போது, டிக்கெட் கட்டண சலுகைகளும் முன்பதிவின்போதே வருமாறு சேர்க்கப்பட்டுள்ளது.

6. டிக்கெட் முன்பதிவின்போது ஏற்படும் இடையூறுகளான பாப்-அப், பேனர்கள், அடிக்கடி கேப்சா பதிவிடுவது, அனிமேஷன்கள் ஆகியவை நீக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் டிக்கெட் முன்பதிவு எளிமையாகவும், விரைவாக சில நிமிடங்களிலேயே முடியும்.

7. பயணிகளுக்கான சேவைகளை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உள்கட்டமைப்பு, சரக்கு போக்குவரத்து மற்றும் திட்டச் செயலாக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய பல்வேறு சீர்திருத்தங்களையும் ரயில்வே நிர்வாகம் செய்துள்ளது.

8. ஏற்கெனவே இருந்த வலைதள முறையில் நிமிடத்துக்கு 32 ஆயிரம் டிக்கெட்டுகள்தான் முன்பதிவு செய்ய முடியும், இப்போது மேம்படுத்தப்பட்ட வலைதளத்தின் மூலம், நிமிடத்துக்கு 1.50 லட்சம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

9. அடிக்கடி ரயில் பயணம் மேற்கொள்பவராக இருந்தால் அவரின் பெயர், முகவரி, ஆதார் எண், வயது, செல்போன் எண் ஆகியவற்றை சேமித்து வைக்க முடியும். இதனால் டிக்கெட் முன்பதிவின்போது, மீண்டும் விவரங்களைக் குறிப்பிடாமல் விரைவாக முன்பதிவு செய்ய முடியும்.

10. விரைவான தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. முந்தைய வலைதளத்தில் இருந்தது போன்று அதிகமான கேப்ச்சா பதிவிடுவது, ஓடிபி எண்கள் கொடுப்பது, முன்பதிவு தோல்வி அடைவது போன்றவை இருக்காது. அதற்கு மாறாக வேகமாக, எளிமையாக டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.

11. விரைவான தேடுதல் வசதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நகருக்கு ரயில் சேவை குறித்து ஆய்வு செய்ய, அந்த நகரின் பெயர் கொடுத்து தேடியவுடன் எத்தனை ரயில்கள் இயக்கப்படுகின்றன, நேரம், கட்டணம், சிறப்பு ரயில் என அனைத்து விவரங்களும் நொடிப்பொழுதில் வருவதற்கு வகை செய்யப்பட்டுள்ளது.

12. பயணிகளின் பணத்துக்கு பாதுகாப்பு வசதிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த வலைதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, வலைதளம் தேங்கி நின்றுவிட்டால் பணம் எடுக்கப்படும். ஆனால், டிக்கெட் முன்பதிவாகாது. சில நேரங்களில் விரைவாகவே பணம் எடுக்கப்படும், ஆனால் அப்டேட் ஆகாது. இதைக் களையும் வகையிலும், பயணிகளின் பணத்துக்கு பாதுகாப்பு செய்யும் வகையில் பரிமாற்ற விதிகள் எளிமையாக்கி, தடங்களின்றி பணம் பரிமாற்றம் செய்ய வகை செய்யப்பட்டுள்ளது.

13. பிஆர்எஸ் எனப்படும் பயணிகள் முன்பதிவு முறையின் கட்டமைப்பும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. பழைய வலைதளத்தில் 4 லட்சம் விசாரணைகள் மட்டுமே வந்த நிலையில் மேம்படுத்தப்பட்ட தளத்தில் 10 மடங்கு அதிகப்படுத்தப்பட்டு நிமிடத்துக்கு 40 லட்சம் விசாரணைகள் வரும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

பழைய வலைதளம் இனி?

பழைய வலைதளமும் செயல்பாட்டில் இருக்கும். இப்போது ஐஆர்டிசி அறிமுகம் செய்யும் பீட்டா வெர்ஷனில்தான் வலைதளம் செயல்படும். பயணிகள் சிலருக்கு பழைய வலைதளத்தை அணுக வேண்டுமென்றால், அதில் உள்ள பட்டனை கிளிக் செய்து பழைய வெர்ஷனுக்குச் செல்லலாம். ஆனால், குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே பழைய வெர்ஷன் பயன்பாட்டில் இருக்கும்.

மொபைலில் ஐஆர்டிசி செயலி வைத்திருப்பவர்கள், கூகுள் ப்ளே ஸ்டோரில் சென்று தங்கள் செயலின் அப்டேட் வெர்ஷன் வந்துள்ளதா என பரிசோதிக்க வேண்டும். ஒருவேளை புதிய வெர்ஷன் வந்திருந்தால், அதை அப்டேட் செய்து கொள்ளலாம்.

ஐஆர்சிடிசி இந்தப் புதிய, மேம்படுத்தப்பட்ட வலைதளத்தை கொண்டுவரும் முன் சோதனை ஓட்டமும் நடத்தியுள்ளது. தொழில்நுட்பத்தின் மூலம் பயணிகள் சேவைகளை நவீனமயமாக்க புதிய வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. ஜெய்பூரில் உல்ள மாணவர்கள் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களைக் கொண்டு ‘பீட்டா’ வெர்ஷன் குறித்து கருத்துகளை ஐஆர்டிசி கேட்டறிந்தது.

அவர்கள் அளித்த ஆலோசனைகள், கருத்துகள் ஏற்கப்பட்டு, திருத்தங்களைச் செய்து மேம்படுத்தப்பட்ட இந்த வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் இணையவழி ரயில் முன்பதிவுக்கான தேவையைப் பூர்த்தி செய்வதோடு, விரைவான, நம்பகமான மற்றும் தடையற்ற டிக்கெட் முன்பதிவு அனுபவத்தையும் புதிய வலைதளம் வழங்கும் என நம்பலாம்.

ஐஆர்சிடிசி புதிய வலைதளம் எப்படி? - எளிய அம்சங்களும், 13 குறிப்புகளும் | IRCTC’s new website
அந்நிய செலாவணி கையிருப்பு முதல் பொருளாதார தாக்கம் வரை - ஒரு தெளிவுப் பார்வை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in