வெனிசுலா கச்சா எண்ணெய் ஏற்றுமதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்க அமெரிக்கா திட்டம்
வாஷிங்டன்: வெனிசுலாவில் கச்சா எண்ணெய் கட்டமைப்பை நவீனமாக்க அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களை அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில் வெனிசுலாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை கட்டுப்பாட்டில் வைத்திருப்போம் என அமெரிக்கா கூறியுள்ளது.
இதுகுறித்து கருத்தரங்கு ஒன்றில் பேசிய அமெரிக்க எரிசக்தி துறை அமைச்சர் கிரிஸ் ரைட் கூறும்போது, ``வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கான தடை படிப்படியாக நீக்கப்படும். வெனிசுலா கச்சா எண்ணெயை மீண்டும் விற்கப் போகிறோம். இந்த வருமானத்தை வெனிசுலா கணக்கில் வரவு வைக்ப்படும்.
இந்தப் பணம் வெனிசுலா மக்களுக்காக பயன்படுத்தப்படும். 2000-ம் ஆண்டுகளில் அமெரிக்காவின் எக்ஸான் மொபில் கார்பரேஷன், கோனோகோபிலிப்ஸ் மற்றும் கம்பெனிகளை வெனிசுலாவின் முன்னாள் அதிபர் ஹுகோ சாவேஸ் அரசுடைமையாக்கினார்.
அந்த நிறுவனங்களுக்கு எல்லாம் இழப்பீடு அளிக்க வேண்டியுள்ளது. வெனிசுலா எண்ணெய் விற்பனை மூலம் முதலில் கிடைக்கும் பணம், அமெரிக்க நிறுவனங்களுக்கு திருப்பி கொடுக்க பயன்படுத்தப்படாது. அது நீண்ட கால பிரச்சினை” என்றார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டியில், ”அமெரிக்கா விற்பனை செய்ய 5 கோடி பேரல் கச்சா எண்ணெ்யை வெனிசுலா விடுவிக்கும். இவற்றின் தற்போதைய சந்தை மதிப்பு 2.8 பில்லியன் டாலர்” என்றார்.
