

புதுடெல்லி: நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைக்க நடப்பு நிதியாண்டில் திட்டமிடப்பட்ட ரூ.12.22 லட்சம் கோடி மூலதனச் செலவு இலக்கை எட்டுவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
அசோகா பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் பேசிய மத்திய செலவினங்கள் துறை செயலர் வி.வல்னம் இது குறித்துக் கூறியதாவது: உலகளாவிய சூழலால் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்பது யதார்த்தமான உண்மை. இருப்பினும், நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பை மேம்படுத்தும் மூலதனச் செலவினங்களுக்கு அரசு தேவையான முன்னுரிமைகளை அளிக்கும். இதற்காக, பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.12.22 லட்சம் கோடி நிதியை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
வரும் மாதங்களில் வரி வருவாய் வசூலில் சுணக்கம் உள்ளிட்ட பல்வேறு சவால்கள் காத்திருக்கின்றன. 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.3 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், புதிய புள்ளிவிவரங்களின்படி நாமினல் ஜிடிபி திருத்தப்பட்டதால், அது தற்போது 4.5 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.