

சென்னை: கிண்டியில் நடைபெறும் ஜாம் மற்றும் ஸ்குவாஷ் தயாரிக்கும் பயிற்சி வகுப்பில் ஆர்வம் உள்ளவர்கள் பங்கேற்க தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து பயிற்சி மையத்தின் தலைவர் ஏ.டி.அசோக் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தில் ஜன. 22-ம் தேதி (வியாழக்கிழமை) ஜாம், ஸ்குவாஷ் தயாரிக்க பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் மிக்ஸ்டு ப்ரூட், மாம்பழம், கேரட், பீட்ரூட் வகைகளில் ஜாம் தயாரித்தல், திராட்சை, எலுமிச்சை, புதினா வகை ஸ்குவாஷ்கள் மற்றும் ரோஸ் சிரப், எலுமிச்சை நன்னாரி போன்றவற்றை தயாரிக்கவும் செயல்முறை விளக்கம் அளிக்கப்படும்.
இதேபோல், ஜன. 23-ம் தேதி நடைபெறும் காய்கறி பயிர்களில் அங்கக வேளாண்மை மேற்கொள்வது குறித்த பயிற்சியில், மண் வள மேலாண்மை, இயற்கை முறையில் ஊட்டச்சத்து, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, அங்கக தர சான்றிதழ் பெறுதல் உள்ளிட்டவை தொடர்பாக தொழில்நுட்ப வல்லுநர்கள் உரையாற்ற உள்ளனர்.
தொழில் முனைவோர், விவசாயிகள், மகளிர், இளைஞர்கள், சுய உதவிக் குழுவினர் என அனைத்து தரப்பினரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் 044-29530048 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, முன்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.