

புதுடெல்லி: இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: "நாடு முழுவதும் உள்ள ரியல் எஸ்டேட் சொத்துகளின் டிஜிட்டல் கட்டமைப்பை ஆய்வு செய்து தரச் சான்றிதழ் வழங்கும் முகமையாக ராநெக்ஸ்ட் டெக்னாலஜிஸ் நிறுவனம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஒரு அடுக்குமாடி வீடு அல்லது அலுவலகத்துக்குள் அதிவேக இணையத்துக்கான பைபர் கேபிள்கள் சரியாக இணைக்கப்பட்டுள்ளதா, லிப்ட், தரை கீழ் தளம் போன்ற இடங்களில் செல்போன் சிக்னல் தடையின்றி கிடைக்குமா என இந்த நிறுவனம் பரிசோதித்து சான்றிதழ் வழங்கும். இதுபோல, வருங்காலத்தில் வரப்போகும் அதிநவீன ஸ்மார்ட்ஹோம் வசதிகளுக்கு அந்தக் கட்டிடம் தகுதியானதா என்பது குறித்தும் சான்றிதழ் வழங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஒரு வீடு அல்லது அலுவ லகத்தை வாங்கும்போது அல்லது வாடகைக்கு எடுக்கும்போது, அங்கு தண்ணீர், மின்சார வசதி இருக்கிறதா என பார்ப்போம். இதுபோல், அந்தப் பகுதியில் இன்டர்நெட் வேகம் எப்படி இருக்கும்? செல்போன் சிக்னல் கிடைக்குமா? என்பதையும் இனி தெரிந்து கொள்ளலாம்.