

புதுடெல்லி: ஈரான் போர் காரணமாக சமையல் காஸ் விநியோகம் தடைபட்டது. வீட்டு உபயோக சிலிண்டர்கள் விநியோகத்துக்கு முன்னுரிமை அளிப்பதற்காக வர்த்தக சிலிண்டர்கள் விநியோகத்துக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்தது.
இதனால் நாடு முழுவதும் உள்ள உணவகங்களில் உணவுப் பொருட்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டது. தற்போது மக்கள் காஸ் சிலிண்டர்கள் முன்பதிவு செய்வது குறைந்து, வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
வர்த்தக சிலிண்டர்கள் விநியோகத்தில் 5-ல் ஒரு பங்கு மீண்டும் தொடங்கிய பின்பு, மாநிலங்களுக்கு கூடுதலாக 10% ஒதுக்கீடு செய்யவும், பைப் மூலம் காஸ் விநியோகம் செய்யும் திட்டத்தை விரைவு படுத்தவும் மத்திய அரசு அனுமதி வழங்கியது.
இந்நிலையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கூடுதலாக 20% ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் வர்த்தக சிலிண்டர்களுக்கான ஒதுக்கீடு 50% ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக உணவு விடுதிகள், தொழிற்சாலை கேன்டீன்கள், உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள், சமுதாய உணவு கூடங்கள் ஆகியவற்றுக்கு காஸ் சிலிண்டர்கள் தாராளமாகக் கிடைக்கும்.