

புதுடெல்லி: அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் நேற்று 7-வது நாளாக நீடித்தது. இருதரப்பு போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் கச்சா எண்ணெய் போக்குவரத்து முடங்கியிருக்கிறது. இதன் எதிர்விளைவாக உலகம் முழுவதும் கச்சா எண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக மத்திய பெட்ரோலியத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: ஆந்திராவின் விசாகப்பட்டினம், கர்நாடகாவின் மங்களூரு, படூர் பகுதி சேமிப்பு கிடங்குகளில் போதுமான அளவு கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது. மேலும் இந்திய பொதுத்துறை, தனியார் நிறுவனங்களிடமும் பெருமளவில் கச்சா எண்ணெய் இருப்புள்ளது. இந்த கச்சா எண்ணெய் மூலம் இந்தியாவின் பெட்ரோல், டீசல் தேவையை 90 நாட்கள் வரை பூர்த்தி செய்ய முடியும்.
போர் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய முடியவில்லை. இதைத் தொடர்ந்து மத்திய பெட்ரோலிய அமைச்சகம் சார்பில் மாற்று வழிகள் கண்டறியப்பட்டு உள்ளன. ரஷ்யாவிடம் மீண்டும் அதிகளவில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யப்படுகிறது.
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியா, அங்கோலா, கானா உள்ளிட்ட நாடுகளில் எண்ணெய் வயல்கள் உள்ளன. இந்த நாடுகளில் இருந்தும் அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதியை தீவிரப்படுத்தி உள்ளோம். மேலும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்தும் இறக்குமதியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து குழாய் மூலமாக செங்கடல் பகுதிக்கு கச்சா எண்ணெயை கொண்டு வந்து, அங்கிருந்து செங்கடல், இந்திய பெருங்கடல் வழியாக சரக்கு கப்பல்களில் கச்சா எண்ணெயை கொண்டு வர திட்டமிட்டு உள்ளோம்.
மத்திய அரசின் மாற்றுவழி திட்டங்களால் இந்தியாவில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படாது. அவற்றின் விலையும் உயராது. இவ்வாறு பெட்ரோலிய துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.