தொடர்ந்து சரியும் ரூபாய் மதிப்பு: விலைவாசி உயர்வுக்கு எச்சரிக்கை மணி? - ஒரு விரைவுப் பார்வை

தொடர்ந்து சரியும் ரூபாய் மதிப்பு: விலைவாசி உயர்வுக்கு எச்சரிக்கை மணி? - ஒரு விரைவுப் பார்வை
Updated on
2 min read

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில், நாட்டில் விலைவாசி மேலும் கடுமையாக உயரும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

தற்போது கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 109 அமெரிக்க டாலர் அளவில் உள்ளது. இதனால் நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு அதிகரிப்பதோடு, நாட்டின் வெளிநாட்டு வர்த்தகத்தின் மீதும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில்தான், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு புதன்கிழமை அன்று 96.91 என்ற வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்தது. ரூபாயின் மதிப்பு இன்னும் சரியக் கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

ஈரான் உடனான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மோதல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி தற்காலிகமாக மூடப்பட்டதால் உலக அளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு விலை கணிசமாக உயர்ந்துள்ளன. உலகளாவிய எரிசக்தி வர்த்தகத்தில் சுமார் 34% (தினசரி 1.5 கோடி பேரல்கள்) ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே கடந்து செல்கிறது. இதில் 90% சீனா மற்றும் இந்தியா உட்பட ஆசிய நாடுகளுக்குச் செல்கிறது.

மத்திய கிழக்கில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக எரிபொருள் இறக்குமதியை சார்ந்துள்ள இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா தினமும் சுமார் 5.5 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயைப் பயன்படுத்துகிறது. கச்சா எண்ணெய் கடுமையாக விலை உயர்ந்துள்ளதால், இப்போது கூடுதல் டாலர்களை இந்தியா செலவழிக்க வேண்டியுள்ளது.

இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதத்துக்கு அதிகமானவற்றை இறக்குமதி செய்வதால், உலகளாவிய எண்ணெய் விலை உயர்வானது இந்திய ரூபாயின் மதிப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் அமெரிக்க டாலரில் வாங்கப்படுவதால், ரூபாயின் மதிப்பு பலவீனமடையும்போது இறக்குமதிச் செலவு மேலும் அதிகரிக்கிறது.

இதுபோன்ற காரணங்கள் ரூபாய் மதிப்பு சரிவுக்கு முக்கிய காரணமாக உள்ளன. ரூபாயின் மதிப்பு குறைவது ஏற்றுமதிக்கு சாதகமாக சொல்லப்பட்டாலும், ஏற்றுமதியை விட அதிக அளவில் இறக்குமதி செய்யும் இந்தியா போன்ற நாட்டில், ரூபாயின் மதிப்பு குறைவது உள்நாட்டு விலையேற்றத்துக்கு வழிவகுத்துள்ளது.

ஈரான் போர் தொடங்கியதில் இருந்து, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 5 சதவீதம் சரிந்துள்ளது. இதன் காரணமாக நாம் இறக்குமதி செய்யும் ஒவ்வொரு பொருளின் விலையும் குறைந்தபட்சம் 5 சதவீதம் உயர்ந்துள்ளது. இதுவே நாட்டில் பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சூழலில்தான் மிகவும் அத்தியாவசியமான டாலர் கையிருப்பு கரைந்து போவதைத் தடுக்கும் வகையில், எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும், தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறும், தங்கம் வாங்குவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் இந்தியர்களை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

இதனையடுத்து, தங்கம் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதுடன், பெட்ரோல், டீசல், சிஎன்ஜி விலைகளும் உயர்த்தப்பட்டுள்ளன. எரிபொருள் விலை உயர்வு காரணமாக, கடந்த சில நாட்களிலேயே நாட்டில் அனைத்துப் பொருட்களின் விலைவாசியும் கணிசமாக அதிகரித்துள்ளது.

ரூபாய் மதிப்பு சரிய கச்சா எண்ணெய் விலை உயர்வு ஒரு காரணமாக சொல்லப்பட்டாலும், மற்றொருபுறம் வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவில் இருந்து அதிகம் வெளியேறுவதும் முக்கிய காரணமாக உள்ளது.

1990-களில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்களின் விருப்பமான நாடாக இந்தியா இருந்து வருகிறது. இருப்பினும், கடந்த இரண்டு நிதியாண்டுகளாக, இந்தியாவில் இருந்து வெளிநாட்டு முதலீடுகள் அதிகளவில் வெளியேறி வருகிறது. வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் 2026-ஆம் ஆண்டில் இதுவரை 22.4 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்தியப் பங்குகளையும் பத்திரங்களையும் விற்றுள்ளனர்.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மட்டுமல்ல, இந்தியப் பெரு நிறுவனங்களும் இந்திய சந்தைகளில் இருந்து வெளியேறி அதிகளவில் வெளிநாடுகளில் முதலீடு செய்கின்றன. இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டுச் சந்தைகளில் சுமார் 30 முதல் 35 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற காரணிகளே ரூபாய் மதிப்பு சரிவுக்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

மார்ச் 30 அன்று, இந்தியப் பொருளாதாரம் வலுவாக இருப்பதாகவும், மற்ற வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதாரங்களுடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டாலருக்கு நிகராக ரூபாய் மதிப்பு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அவர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தபோது, ​டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சுமார் 94-ஐ தொடும் நிலையில் இருந்தது. அதன்பிறகு, நிலைமை இன்னும் மோசமடைந்துள்ளது.

ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவதன் காரணமாக கச்சா எண்ணெய், நிலக்கரி உட்பட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை பெரிய அளவில் உயரும். இதனால், இறக்குமதி செய்யப்படும் பொருட்களை சார்ந்துள்ள அனைத்துப் பொருட்களின் விலையும் நாட்டில் கடுமையாக உயர வழிவகுக்கும்.

இப்போதைய சூழலில், ரூபாயின் மதிப்பு மேலும் சரியும் என்றே பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இதன் காரணமாக பல்வேறு பொருட்களின் விலையும் இனி படிப்படியாக உயரும். இது நாட்டின் பொருளாதாரம் மீது அழுத்தத்தை உருவாக்குவதுடன், மக்களின் மீதான சுமையையும் அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவது, பணவீக்கத்தை அதிகரித்து விலைவாசி உயர்வு என நேரடியாகவும், வரிகளாக மறைமுகமாகவும் பல்வேறு தாக்கங்களை இனி வரும் நாட்களில் உருவாக்கும் என எச்சரிக்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள். மக்களின் மீதான சுமையை குறைக்க அரசும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கியும் என்ன செய்யப்போகிறது என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.

தொடர்ந்து சரியும் ரூபாய் மதிப்பு: விலைவாசி உயர்வுக்கு எச்சரிக்கை மணி? - ஒரு விரைவுப் பார்வை
Motorola G37 Power ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in