

புதுடெல்லி: செமிகண்டக்டர் துறையில் ரூ.1 லட்சம் கோடி முதலீடுகளை இந்தியா ஈர்த்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
நாட்டின் செமிகண்டக்டர் துறையில் உலகளாவிய ஒத்துழைப்பு, முதலீடு, புத்தாக்கம், திறன் கட்டமைப்பை மேம்படுத்துவதுடன் முதலீட்டாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் புத்தாக்க நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் 5-வது ‘செமிகான் இந்தியா 2026’ மாநாடு மற்றும் கண்காட்சி டெல்லியில் நேற்று முன்தினம் தொடங்கியது.
இந்த மாநாட்டை பிரதமர் மோடி நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது: கடந்த ஜூலை மாதம், மத்திய அமைச்சரவை ரூ.1,27,500 கோடி ஒதுக்கீட்டில் செமிகான் 2.0 திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. இது, உற்பத்தி ஆலைகள் மற்றும் பேக்கேஜிங்கை தாண்டி, பரந்த செமிகண்டக்டர் சூழலமைப்பின் மீது கவனத்தை விரிவுபடுத்துகிறது.
செமிகான் 2.0 திட்டம் அறிவிக்கப்பட்ட சில மாதங்களிலேயே, உலகளாவிய மற்றும் உள்ளூர் முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.1 லட்சம் கோடி வரையிலான முதலீட்டு வாக்குறுதிகளை இந்தியா பெற்றுள்ளது. இது, சிப் தயாரிக்கும் நாடாக மாறுவதற்கான அரசின் முயற்சிகளில் ஏற்பட்டுள்ள ஒரு வேகமான வளர்ச்சியைக் குறிக்கிறது. இந்த முதலீடுகள் அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய செமிகான் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மைக்ரான் மற்றும் முருகப்பா குழுமத்தின் சிப் பிரிவு போன்ற சில நிறுவனங்கள் ஏற்கனவே வணிக உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. இவ்வாறு மத்திய அமைச்சர் பேசினார்.