

புதுடெல்லி: இந்திய பொருட்கள் மீதான வரி 50-லிருந்து 18% ஆக குறைக்கப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்து உள்ளது. இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கைகளால் அமெரிக்க அரசு திடீரென வரியை குறைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய பொருட்கள் மீது அமெரிக்க அரசு 50 சதவீத வரியை விதித்தது. ஆனால் மத்திய அரசு மிகுந்த நிதானத்தை கடைப்பிடித்தது. அதேநேரம் அமெரிக்க சந்தைக்கு மாற்றாக புதிய சந்தைவாய்ப்புகளை இந்தியா தேடியது.
இதன் விளைவாக ஐரோப்பிய நாடுகள், தென்அமெரிக்க நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள், மத்திய கிழக்கு நாடுகளுக்கு இந்திய பொருட்களின் ஏற்றுமதி கணிசமாக அதிகரித்தது. உள்நாட்டில் ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டது. இதனால் உள்நாட்டு வணிகம் கணிசமாக அதிகரித்தது.
கடந்த ஜூலையில் இந்தியா, பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இதைத் தொடர்ந்து கடந்த டிசம்பரில் நியூசிலாந்து, ஓமன் நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இந்தியா ஏற்படுத்தியது.
கடந்த ஜனவரி 27ம் தேதி 27 நாடுகள் அடங்கிய ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது. இது, அனைத்து ஒப்பந்தங்களின் தாய் என்று வர்ணிக்கப்பட்டது.
இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான ஒப்பந்தம் அமெரிக்காவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கிரீன்லாந்து விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் மீது கூடுதல் வரி விதிப்பேன் என்று அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்து வந்தார். ஆனால் இந்தியாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் ஒப்பந்தம் மேற்கொண்ட உடன் தனது நிலைப்பாட்டை அதிபர் ட்ரம்ப் மாற்றினார்.
ஐரோப்பிய நாடுகளுடன் இணக்கமான அணுகுமுறையை கடைப்பிடித்தார். அதேநேரம் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய அமெரிக்க அரசு தீவிரம் காட்டியது.
இந்த சூழலில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடியுடன் திங்கள்கிழமை தொலைபேசியில் பேசினேன். ரஷ்யா உக்ரைன் போர் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்தோம். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திக் கொள்ள பிரதமர் மோடி சம்மதம் தெரிவித்தார்.
இனிமேல் அமெரிக்காவிடம் இருந்து அதிக கச்சா எண்ணெயை இந்தியா வாங்கும். வெனிசுலாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது குறித்தும் நாங்கள் ஆலோசித்தோம். இந்த நடவடிக்கைகள் உக்ரைன் போரை நிறுத்த உதவி செய்யும்.
500 பில்லியன் டாலர்: பிரதமர் நரேந்திர மோடியுடன் எனக்கு நட்புறவு நீடிக்கிறது. அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அமெரிக்கா, இந்தியா இடையே வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய நாங்கள் ஒப்புக் கொண்டோம். இதன்படி இந்திய பொருட்களுக்கு அமெரிக்க அரசு இனிமேல் 18 சதவீத வரியை மட்டுமே விதிக்கும். அமெரிக்காவிடம் இருந்து 500 பில்லியன் டாலர் மதிப்பிலான எரிசக்தி, தொழில்நுட்பம், வேளாண் விளைபொருட்கள், நிலக்கரி மற்றும் இதர பொருட்களை வாங்க இந்தியா ஒப்புக்கொண்டிருக்கிறது. அமெரிக்கா, இந்தியா இடையிலான உறவு மேலும் வலுவடையும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி நன்றி: பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது: அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் திங்கள்கிழமை தொலைபேசியில் பேசினேன். இந்திய பொருட்களுக்கு 18 சதவீத வரி விதிக்கப்படும் என்று அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதற்காக 140 கோடி இந்தியர்களின் சார்பில் அவருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இரு பெரும் பொருளாதார நாடுகள், இரு பெரும் ஜனநாயக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் இரு நாடுகளின் மக்கள் பலன் அடைவார்கள். உலகின் அமைதி, ஸ்திரத்தன்மை, செழிப்புக்கு அதிபர் ட்ரம்பின் சீரிய தலைமை அவசியமாகிறது.அவரது அமைதி முயற்சிகளுக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கும். அவருடன் இணைந்து செயல்படுவேன். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.