

புதுடெல்லி: நடப்பு 2025- 26 நிதியாண்டுக்கு ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்கான (பிஎப்) வட்டி விகிதம் 8.25% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான தனியார் துறை ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு ஒவ்வொரு ஆண்டும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎப்ஓ) வட்டி விகிதத்தை நிர்ணயித்து வருகிறது. கடந்த 2023- 24ம் ஆண்டுக்கு பிஎப் வட்டி விகிதத்தை 8.15 சதவீதத்தில் இருந்து 8.25 சதவீதமாக இபிஎப்ஓ உயர்த்தியது. இதையடுத்து 2024- 25ம் நிதியாண்டுக்கும் பிஎப் வட்டி விகிதம் 8.25% ஆக நீடிக்கும் என கடந்த ஆண்டு பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இபிஎப்ஓவின் உயர் முடிவு எடுக்கும் அமைப்பான மத்திய அறங்காவலர்கள் வாரியம் (சிபிடி) நேற்று கூடியது. இதில் நடப்பு 2025- 26 நிதியாண்டுக்கு பிஎப் வட்டி விகிதம் 8.25% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பிஎப் வட்டி விகிதம் 8.25% ஆக நீடிக்கிறது. சிபிடி-யின் இந்த முடிவு மத்திய நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு பிறகு 7 கோடிக்கும் மேற்பட்ட இபிஎப்ஓ சந்தாதாரர்களின் கணக்குகளில் வட்டி வரவு வைக்கப்படும்.
வரலாற்று ரீதியாக, பிஎப் வட்டி விகிதம் பல திருத்தங்களை கண்டுள்ளது. 2018- 19ம் ஆண்டில் 8.65 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் 2019- 20ம் ஆண்டில் 8.5 சதவீதமாக குறைக்கப்பட்டது. சந்தாதாரர்களுக்கு 2016- 17ம் ஆண்டில் 8.65 சதவீதமும், 2017- 18ம் ஆண்டில் 8.55 சதவீதமும் வழங்கப்பட்டது. அதே நேரத்தில் 2015- 16ம் ஆண்டில் இந்த விகிதம் 8.8 சதவீதமாக சற்று அதிகமாக இருந்தது.