

சென்னை: ஓணம் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக, விமானம் மூலம் அதிக அளவில் மக்கள் கேரளா செல்வதால் கொச்சி, திருவனந்தபுரம், கோழிக்கோடு, கண்ணூர் விமானங்களில் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.
கேரளம் மாநிலத்தில் 10 நாட்கள் ஓணம் பண்டிகை கடந்த 16-ம் தேதி முதல் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. முக்கிய நாளான திருவோணம் ஆக.26-ல் கொண்டாடப்படுகிறது. இதற்காக சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வசிக்கும் கேரளம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், ஓணம் பண்டிகையை ஆண்டு தோறும் கேரளம் மாநிலத்தில் உள்ள சொந்த ஊர்களில் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அதனால், ஓணம் பண்டிகைக்காக சென்னையில் வசிப்பவர்கள் கேரளம் செல்ல தொடங்கியுள்ளனர். பேருந்து, ரயில்களில் டிக்கெட் கிடைக்காததால், ஏராளமானோர் விமானங்களில் பயணம் செய்து வருகின்றனர். இதனால், சென்னையில் இருந்து கொச்சி, திருவனந்தபுரம், கோழிக்கோடு, கண்ணூர் செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளன. அதேநேரம், விமான கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளன.
சென்னை- கொச்சி வழக்கமான கட்டணம் ரூ.5,336-ல் இருந்து ரூ.14,843 ஆகவும், திருவனந்தபுரதுக்கு ரூ.5,853-ல் இருந்து ரூ.14,700 ஆகவும், கோழிக்கோடுக்கு ரூ.6,158-ல் இருந்து ரூ.17,678 ஆகவும், கண்ணூருக்கு ரூ.5,655-ல் இருந்து ரூ.12,270 ஆகவும், அதுவே கொச்சி வழியாக செல்வதற்கு கண்ணூர் செல்ல ரூ.21,694 ஆக உயர்ந்துள்ளன.
விமான டிக்கெட் கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளதால், பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனாலும், ஓணம் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் இருந்து கேரளம் மாநிலத்துக்கு கூடுதல் - விமான சேவைகளை இயக்க வேண்டும் என்று கேரளம் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.