

புதுடெல்லி: டயர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள எம்ஆர்எப் நிறுவனத்தின் வலுவான விற்பனை வளர்ச்சியின் காரணமாக, 2025- 26 நிதியாண்டின் 4ம் காலாண்டில் அதன் நிகர லாபம் ரூ.702.25 கோடியாக உயர்ந்துள்ளது.
இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய ரூ.510.5 கோடி நிகர லாபத்தை விட 38 % அதிகம் ஆகும். நான்காம் காலாண்டில் செயல்பாடுகள் மூலம் கிடைத்த ஒருங்கிணைந்த வருவாய் ரூ.8,044.22 கோடியாக இருந்தது, இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் ரூ.7,074.82 கோடியாக இருந்தது.
ஆய்வுக்கு உட்பட்ட இந்த காலாண்டில் மொத்த செலவுகள் ரூ.7,267.51 கோடியாக அதிகரித்துள்ளது, இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் ரூ.6,531.04 கோடியாக இருந்தது. வரும் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டு, தலா ரூ.10 முக மதிப்புள்ள ஒரு பங்குக்கு ரூ.229 இறுதி லாபப்பங்கு வழங்க அதன் வாரியம் பரிந்துரை செய்துள்ளதாக எம்ஆர்எப் தெரிவித்துள்ளது.
மேலும் 2025-26 முழு நிதியாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.2,426.1 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய நிதியாண்டின் ரூ.1,873.29 கோடியாக இருந்தது. இதே காலத்தில் செயல்பாடுகள் மூலம் கிடைத்த ஒருங்கிணைந்த வருவாய் ரூ.31,149.01 கோடியாக இருந்தது, இது முந்தைய நிதியாண்டில் ரூ.28,153 கோடியாக இருந்தது என்று எம்ஆர்எப் நிறுவனம் தெரிவித்துள்ளது.