

கோப்புப் படம்
ஷில்லாங்: மேகாலயா மாநிலத்தில் உள்ள இரண்டு தனியார் சிமெண்ட் நிறுவனங்கள், உரிய ஆவணங்களின்றி சுமார் 2.93 லட்சம் மெட்ரிக் டன் நிலக்கரியை வாங்கியதாக உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கண்காணிப்புக் குழு தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேகாலயா மாநிலத்தில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கம் மற்றும் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த, அம்மாநில உயர் நீதிமன்றம் ஓய்வுபெற்ற நீதிபதி பி.பி. கடகே தலைமையில் ஒரு குழுவை நியமித்தது.
இதுகுறித்து விரிவாக விசாரணை நடத்திய இக்குழு தனது அறிக்கையை வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: குறிப்பிட்ட இரண்டு சிமெண்ட் நிறுவனங்களும், கடந்த 2025-ம் ஆண்டு பிப்ரவரி முதல் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரையிலான காலக்கட்டத்தில், மாநிலத்திற்கு வெளியிலிருந்து நிலக்கரியைக் கொண்டு வந்துள்ளன. இதற்காக, 2024-ம் ஆண்டுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளின் கீழ் பெறப்பட வேண்டிய கட்டாய அனுமதிகளை அவை பெறவில்லை.
குறிப்பாக, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அந்நிறுவனங்கள் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்த போதிலும், தகுந்த அதிகாரிகளிடம் இருந்து அதற்கான ஒப்புதல் எதுவும் வழங்கப்படவில்லை. அனுமதி இல்லாத நிலையிலும், சுமார் 2.93 லட்சம் மெட்ரிக் டன் நிலக்கரி கொண்டு வரப்பட்டது விதிமீறல் ஆகும்.
நிலக்கரி கொண்டு வரப்பட்டதில் பல முறைகேடுகள் நடந்துள்ளது. கனிமப் போக்குவரத்துச் சீட்டுகள், வரி விலைப்பட்டியல், இ-வே பில்கள், உற்பத்திச் சான்றிதழ் மற்றும் எடையிடும் விவரங்கள் போன்ற அத்தியாவசிய ஆவணங்கள் எதுவுமே முறையாகப் பராமரிக்கப்படவில்லை. இவ்வாறு அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.