ஈரான் போர் தாக்கம்: தீப்பெட்டி மூலப்பொருள் விலை 2 மடங்கு அதிகரிப்பு

ஈரான் போர் தாக்கம்: தீப்பெட்டி மூலப்பொருள் விலை 2 மடங்கு அதிகரிப்பு

Published on

சிவகாசி: ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா போர் காரணமாக தட்டுப்பாடு ஏற்பட்டு, தீப்பெட்டி தயாரிக்கத் தேவையான மூலப் பொருட்கள் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளதால் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

போர் தொடர்ந்தால் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உற்பத்தி யாளர்கள் கவலை தெரிவிக் கின்றனர். விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, வேலூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங் களில் 2,530 தீப்பெட்டித் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

தீப்பெட்டி தொழில் மூலம் தமிழகத்தில் சுமார் 6 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். இவர்களில் 90 சதவீதம் பேர் பெண்கள்.

தீப்பெட்டி தயாரிக்கத் தேவையான தீக்குச்சி ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இருந்தும், மெழுகு, கச்சா எண்ணெயிலிருந்து பிரித்தெடுக்கப்படும் சல்பர் உள்ளிட்ட வேதிப் பொருட்கள் ஈரான், சவுதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படுகிறது

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா இணைந்து போர் தொடுத்து வருவதாலும், அதற்கு பதிலடியாக ஹார்முஸ் நீரிணையை மூடிய ஈரான், வளைகுடா நாடுகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் தீப்பெட்டிக்கு தேவையான மூலப்பொருள் இறக்கு

மதி தடைபட்டு, இரண்டு மடங்கு விலை உயர்வால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். இதுகுறித்து சிவகாசி தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கூறுகையில் ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா போர் காரணமாக தீப்பெட்டி உற்பத்திக்கான அனைத்து மூலப் பொருட்கள் இறக்குமதி தடைபட்டு, மூலப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் முக்கிய மூலப்பொருளான வேதிப்பொருட்கள் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் மேலும் விலை உயர வாய்ப்பு உள்ளது. போர் தொடர்ந்து நீடித்தால் மூலப்பொருட்கள் கிடைப்பதில் முற்றிலும் தடை ஏற்படும்.

தமிழகம் முழுவதும் தீப்பெட்டித் தொழில் உற்பத்தி பாதிக்கப்பட்டு, லட்சக் கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும். இதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

ஈரான் போர் தாக்கம்: தீப்பெட்டி மூலப்பொருள் விலை 2 மடங்கு அதிகரிப்பு
காஸ் தட்டுப்பாடு தாக்கம்: மதுரையில் ஒரு டன் விறகு விலை ரூ.15,000 ஆக உயர்வு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in