

சென்னை: இந்த ஆண்டு அட்சய திருதியை தங்கம் விற்பனை 30 சதவீதம் வரை சரிந்துள்ளதாக நகை வியாபாரிகள் தெரிவித்தனர்.
அட்சய திருதியை நாளில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் வாங்குவது பொதுமக்களின் வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டு அட்சய திருதியை இரண்டு நாட்கள் கடைபிடிக்கப்பட்டது.
இதையொட்டி, தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் நகைக்கடைகள் காலை 8 மணிக்கே திறக்கப்பட்டன. சென்னையில் தியாகராய நகர், புரசைவாக்கம், பாரிமுனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள நகைக் கடைகளில் தங்கம் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.
அட்சய திருதியை விற்பனை நேற்றுடன் முடிவடைந்த நிலையில், தங்கம் விற்பனை கடந்த ஆண்டை விட 30 சதவீதம் சரிந்துள்ளதாக நகை வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, நகை வியாபாரிகள் சங்க நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘‘இந்தியாவில் அட்சய திருதியை விற்பனை கடந்த ஆண்டு ரூ.20 ஆயிரம் கோடியாக இருந்தது.
தமிழகத்தில் ரூ.14 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் கோடியாக இருந்தது. இந்த ஆண்டு தங்கம் விற்பனை 30 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. தமிழகத்தில் சுமார் ரூ.10 ஆயிரம் கோடி விற்பனை நடைபெற்றுள்ளது.
இதற்கு முக்கியக் காரணம், தங்கத்தின் விலை சுமார் 60 சதவீதம் உயர்ந்ததுதான். ஆனாலும், மொத்த விற்பனை மதிப்பு 20 முதல் 25 சதவீதம் வரை அதிகரித்துள்ளது’’ என்றார்.