

புதுடெல்லி: இண்டிகோ விமானச்சேவை ரத்து தொடர்பான விவகாரத்தில் 4 அதிகாரிகளை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) சஸ்பெண்ட் செய்துள்ளது.
இந்தியா முழுவதும் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவன விமான சேவைகள் கடந்த 9 நாட்களாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. நேற்று சென்னை விமான நிலையத்தில் 10-வது நாளாக 36 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல் பெங்களூரு விமான நிலையத்திலிருந்து 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் 4 விமான செயல்பாட்டு ஆய்வாளர்களை(எஃப்ஓஐ) சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்(டிஜிசிஏ) சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.
இண்டிகோ விமானச் சேவை பிரச்சினையில் சரிவர செயல்படத் தவறிய விமான செயல்பாடு மற்றும் பாதுகாப்பை மேற்பார்வை செய்து வந்த அந்த 4 விமான செயல்பாட்டு ஆய்வாளர்களை டிஜிசிஏ நேற்று சஸ்பெண்ட் செய்துள்ளது.
ஆய்வாளர்கள் ரிஷ் ராஜ் சாட்டர்ஜி, சீமா ஜம்னானி, அனில் குமார் போக்ரியால், பிரியம் கவுஷிக் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிகாரிகள் ஆவர். விமான ரத்துகளால் பல்வேறு விமான நிலையங்களில் பயணிகள் நெரிசல், தாமதம், குழப்பம் ஆகியவை அதிகரித்த நிலையில், இதற்கான உண்மை காரணங்களை ஆராய, டிஜிசிஏ 4 பேர் கொண்ட ஒரு சிறப்பு குழுவை அமைத்துள்ளது. அந்தக் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் 4 பேர் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.