

வாஷிங்டன்: அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் புதன்கிழமை நடைபெற்ற ‘நிலக்கரியின் சாம்பியன்’ என்ற நிகழ்ச்சியில் அதிபர் ட்ரம்ப் பேசியதாவது: கடந்த சில மாதங்களில் ஜப்பான், கொரியா, இந்தியா உட்பட பல நாடுகளுடன் நிலக்கரி ஏற்றுமதியை அதிகரிக்க வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்களைச் செய்துள்ளோம்.
நாங்கள் இப்போது உலகம் முழுவதும் நிலக்கரியை ஏற்றுமதி செய்கிறோம். நமது நிலக்கரியின் தரம் உலகின் மிகச்சிறந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. இதன்மூலம் அமெரிக்காவின் நிலக்கரி ஏற்றுமதி பெருமளவில் அதிகரிக்கும். இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்காவும் இந்தியாவும் ஓர் இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்துக்கான கட்டமைப்பை எட்டியுள்ளதாக இரு நாடுகளும் கடந்த வாரம் அறிவித்தன. இதன்படி, அமெரிக்காவின் அனைத்து தொழில் துறை சார்ந்த பொருட்கள், உணவு மற்றும் விவசாயப் பொருட்களுக்கான வரிகளை இந்தியா நீக்கும் அல்லது குறைக்கும்.
அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா 500 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்களை வாங்க திட்டமிட்டுள்ளது. விமானங்கள் மற்றும் அதன் பாகங்கள், விலைமதிப்பற்ற உலோகங்கள், தொழில்நுட்ப தயாரிப்புகள் மற்றும் கோக்கிங் நிலக்கரி ஆகியவை இதில் அடங்கும்.