

கோப்புப்படம்
புதுடெல்லி: உள்நாட்டு கப்பல் கட்டும் திறனை வலுப்படுத்துவதையும், உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்துவதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டு 2 முக்கிய கப்பல் கட்டும் திட்டங்களை மத்திய அரசு முன்மொழிந்துள்ளது.
அதன்படி, கப்பல் கட்டும் நிதி உதவித் திட்டம் (எஸ்பிஎப்ஏஎஸ்) மற்றும் கப்பல் கட்டும் மேம்பாட்டுத் திட்டம் (எஸ்பிடிஎஸ்) ஆகிய இந்த 2 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. அதற்கான அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்களை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
எஸ்பிஎப்ஏஎஸ் திட்டத்துக்கு மொத்தம் ரூ.24,736 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், கப்பலின் வகையைப் பொறுத்து, ஒரு கப்பலுக்கு 15-25 சதவீதம் வரை அரசு நிதி உதவி வழங்கும். எஸ்பிடிஎஸ் திட்டம் ரூ.19,989 கோடி பட்ஜெட் ஒதுக்கீட்டைக் கொண்டுள்ளது. இது, நீண்ட கால திறன் மற்றும் ஆற்றல் உருவாக்கத்தில் கவனம் செலுத்துகிறது.
இந்த வழிகாட்டுதல்கள் ஒரு நிலையான மற்றும் வெளிப்படையான கட்டமைப்பை உருவாக்குகின்றன.