

சென்னை: சென்னையில் இன்று (மே.15) காலை 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.800 குறைந்த நிலையில், மாலையில் பவுனுக்கு மேலும் ரூ.1,480 குறைந்தது. அந்த வகையில் ஒரே நாளில் தங்கம் விலை பவுனுக்கு 2,280 சரிந்தது.
இந்தியா தனது தங்க நுகர்வில் கிட்டத்தட்ட முழுவதையும் இறக்குமதி மூலமாகவே பூர்த்தி செய்கிறது. இந்நிலையில் அந்நியச் செலாவணிக் கையிருப்பைப் பாதுகாக்க உதவும் வகையில், ஓராண்டுக்கு தங்கம் வாங்குவதை தவிர்க்குமாறு மக்களுக்கு பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை அறிவுறுத்தினார்.
தங்கம், வெள்ளியின் வெளிநாட்டு கொள்முதலைக் கட்டுப்படுத்தவும் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மீதான அழுத்தத்தைக் குறைக்கவும் எடுக்கப்படும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, மே 12-ம் தேதியன்று தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு 6-லிருந்து 15% ஆக உயர்த்தியது.
இதனைத் தொடர்ந்து மே 13-ம் தேதி, தங்கம் விலை பவுனுக்கு ரூ.5,360 அதிரடியாக உயர்ந்தது. அன்றைய தினமே மாலையில் குறைந்தாலும், நேற்று (மே 14) மீண்டும் உயர்ந்தது.
இந்நிலையில், சென்னையில் இன்று (மே 15) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து, ஒரு கிராம் ரூ.ரூ.14,950-க்கும், பவுனுக்கு ரூ.800 குறைந்து ஒரு பவுன் ரூ.1,19,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
அதன்பின், மாலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.185 குறைந்து ஒரு கிராம் ரூ.14,765-க்கும், பவுனுக்கு ரூ.1,18,120-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை காலையில் கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ.10 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.305-க்கும், ஒரு கிலோ ரூ.3 லட்சத்து 5 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், மாலையில் எந்த மாற்றமும் இன்றி விற்பனையாகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியின் தாக்கத்தை தாண்டி, ஈரான் - அமெரிக்கா மோதல் போக்கு உள்ளிட்ட சர்வதேச காரணிகளால் தங்கம் மீதான முதலீடு குறைந்துள்ளது. இதுவும் ஆபரணத் தங்கம் விலை சரிவுக்கு காரணம். அதேவேளையில், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பின் தாக்கத்தால் அமெரிக்க டாலர் மதிப்பு கூடி வருகிறது.
இதனிடையே, இன்று இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி கண்டுள்ளது. இன்றைய வர்த்தகத்தின் இடையே அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.96 என கடும் வீழ்ச்சி கண்டதும் கவனிக்கத்தக்கது.