

சென்னை: சிறிய ஏற்றத்துக்குப் பினர் தங்கம் விலை இன்று (மார்ச் 24) மீண்டும் குறைந்துள்ளது. சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் இரு முறை குறைந்து, பின்னர் மாலையில் ஒரு முறை ஏற்றம் கண்டது. அதாவது, நேற்று, காலையில் கிராமுக்கு ரூ.670 குறைந்த நிலையில், மாலையில் மேலும் ரூ.280 குறைந்தது. பின்னர் உயர்ந்து இறுதியாக ஒரு கிராம் ரூ.13,340-க்கு விற்பனையானது.
இந்நிலையில், இன்று (மார்ச் 24) தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது. அதாவது, பவுனுக்கு ரூ.2,720 குறைந்துள்ளது.
ஈரான் போர் காரணமாக சர்வதேச சந்தையில் எரிபொருள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால், அவற்றின் விலை உயர்ந்து வருகிறது. எதிர்கால எரிபொருள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பல்வேறு நாடுகளும் கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களை வாங்குவதில் தீவிரம் காட்டி வருகின்றன.
இதனால், டாலர் பயன்பாடு அதிகரித்து அதன் மதிப்பு உயர்ந்து வருகிறது. இதனால், முதலீட்டாளர்கள் பலரும் டாலரில் முதலீடு செய்வதை அதிகரித்து வருகின்றனர். இதன் காரணமாக தங்கத்தின் மீதான முதலீடு குறைந்து வருகிறது. தங்கத்தின் விலை சரிவதற்கு இது ஒரு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, உலக பங்குச் சந்தை முதலீடுகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் காரணமாக, தங்கத்தின் விலை குறைந்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதன்படி, சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.340 குறைந்து ஒரு கிராம் ரூ.13,000-க்கும், பவுனுக்கு ரூ.2,720 குறைந்து ஒரு பவுன் ரூ.1,04,000-க்கும் விற்பனையாகிறது.
அதேபோல் வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.2,40,000-க்கும் விற்பனையாகிறது.