

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சென்னையில் இன்று (மே 25) பவுனுக்கு ரூ.400 என உயர்ந்துள்ளது. வெள்ளி விலையை பொறுத்தவரை இன்று மாற்றம் இல்லை.
சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.
கடந்த 13-ம் தேதி தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. அதையடுத்து தங்கம் விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் (மே 25) இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,780-க்கும், பவுனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,18,240-க்கும் விற்பனையாகிறது. கடந்த சனிக்கிழமை அன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 குறைந்தது குறிப்பிடத்தக்கது.
24 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.440 என விலை உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,28,992-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரையில் இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.295-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.2,95,000-க்கும் விற்பனையாகிறது.