

சென்னை: சென்னையில் இன்று (பிப்.28) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.5,200 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்தைக் கடந்துள்ளது. வெள்ளி விலையும் ஒரே நாளில் கிராமுக்கு ரூ.25 உயர்ந்துள்ளது.
சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, உலக பங்குச் சந்தை முதலீடுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.
இந்தச் சூழலில், கடந்த சில தினங்களாக சற்றே குறைந்து வந்த தங்கம் விலை இன்று ஒரே நாளில் வெகுவாக அதிகரித்து புதிய உச்சம் நோக்கிச் செல்கிறது. உலக நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ரீதியான உறவு இதற்கு முக்கிய காரணம் என துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் பதற்றமும் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இன்று காலை ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கட்டவிழ்த்துள்ளன.
இதனால், பாதுகாப்பு கருதி தங்கம் மீதான முதலீடு என்பது சர்வதேச அளவில் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கிவிட்டது. இதன் எதிரொலியாக சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரே நாளில் இருமுறை உயர்ந்துள்ளது.
காலையில் கிராமுக்கு ரூ.300 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15,200-க்கு விற்கப்பட்ட்ட நிலையில், பிற்பகலில் கிராமுக்கு மேலும் ரூ.350 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,550-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ஒரே நாளில் ரூ.5,200 அதிகரித்து ஒரு பவுன் ரூ.1,24,400-க்கு விற்பனையாகிறது.
அதேபோல், இன்று காலையில் வெள்ளி கிராமுக்கு ரூ. 5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.320-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.3,20,000-க்கும் விற்பனையாகிறது.
தங்கம், வெள்ளி விலையின் அதிரடி ஏற்றம் நகை வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் - அமெரிக்கா போர் மூண்டுள்ள நிலையில், இந்த விலையேற்றம் இனி இன்னும் பல உச்சங்களைக் காணக் கூடும் என்றே அஞ்சப்படுகிறது.