

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.400 உயர்ந்து, ரூ.99,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளையில், வெள்ளி விலை உச்சம் தொட்டுள்ளது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், அக்.17-ம் தேதி ரூ.97,600-ஆக விலை அதிகரித்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. இதைத் தொடர்ந்து, பவுன் தங்கம் அக்.28-ம் தேதி ரூ.88,600 ஆகவும், நவ.13-ம் தேதி ரூ.95,920 ஆகவும் இருந்தது.
அதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்த நிலையில், டிச.12-ம் தேதி வரலாறு காணாத வகையில் ரூ.98,960 ஆக உயர்ந்தது. பின்பு, 3 நாட்களுக்கு அதே விலையில் நீடித்த நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை டிச.15-ல் 1 லட்சம் ரூபாயை தாண்டி, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. அன்றைய நாளில் ரூ.1 லட்சத்து 120-க்கு விற்பனை செய்யப்பட்டது. மறுநாள், சற்று விலை குறைந்திருந்தது.
இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிச.17) பவுனுக்கு ரூ.400 உயர்ந்து, ரூ.99,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.50 உயர்ந்து, 12,400-க்கு விற்கப்படுகிறது. 24 காரட் தங்கம் ரூ.1,08,216 ஆக இருக்கிறது.
இதுபோல, வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.11 உயர்ந்து, ரூ.222 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.11 ஆயிரம் உயர்ந்து, ரூ.2 லட்சத்து 22 ஆயிரமாகவும் இருக்கிறது.