

தேனி மாவட்டம் கூடலூர் தம்மனம்பட்டி பகுதியில் விளைந்துள்ள செண்டு பூ
படங்கள்: என்.கணேஷ்ராஜ்
கூடலூர்: ஓணம் பண்டிகைக்கான பூ விவசாயத்தில் உரிய விளைச்சல் கிடைத்துள்ளதால் தேனி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக - கேரள எல்லையில் தேனி மாவட்டம் அமைந்துள்ளதால் இங்கிருந்து காய்கறி, பால், பூக்கள் உள்ளிட்டவை அதிகளவில் கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது.
இந்நிலையில் ஓணம் பண்டிகையை முன்வைத்து பல்லவராயன்பட்டி, கோட்டூர், பாலார்பட்டி, சீலையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பூ விவசாயம் அதிகளவில் நடைபெற்று வருகிறது.
பண்டிகை நெருங்கிய நிலையில், உரிய விளைச்சல் கிடைத்துள்ளதுடன், இத்துடன் சில நாட்களில் விலையும் உயரும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இது குறித்து தேனி பூ மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் ஆர்.கண்ணன் கூறுகையில், “வரும் 21-ம் தேதி வரலட்சுமி விரத நாளில் இருந்து பூக்களின் தேவை அதிகரிக்கும். ஆக.26-ம் தேதி ஓணம் பண்டிகை என்பதால் உள்ளூர் மட்டுமல்லாது கேரளாவுக்கும் பூக்கள் அதிகளவில் அனுப்பப்படுவதால் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும்” என்றார்.
இந்நிலையில் ஆண்டிபட்டி, தேனி, சீலையம்பட்டி பூ சந்தைகளுக்கு கேரள வியாபாரிகள் வரத் தொடங்கியுள்ளனர். பல்வேறு வகையான பூக்களை கொள்முதல் செய்வதற்கான முன்தொகையையும் வழங்கி வருகின்றனர். இதனால் பூ வணிகம் களைகட்டத் தொடங்கியுள்ளது.
இன்றைய பூக்கள் விலை விபரம்:
மல்லிகை ரூ.400, முல்லை ரூ.300, ஜாதிப்பூ ரூ.300, செண்டுமல்லி ரூ.100, அரளி ரூ.200, சம்மங்கி ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.