விவசாயிகள் அடையாள எண் பெறுவதில் விலக்கு - டிச.1 வரை பயிர்க் காப்பீடு செய்ய அனுமதி!

விவசாயிகள் அடையாள எண் பெறுவதில் விலக்கு - டிச.1 வரை பயிர்க் காப்பீடு செய்ய அனுமதி!
Updated on
2 min read

சென்னை: 2025-2026-ஆம் ஆண்டு சம்பா நெற்பயிர் மற்றும் இதர பயிர்களை காப்பீடு செய்ய, விவசாயிகள் அடையாள எண் கட்டாயம் என்பதில் இருந்து விலக்களித்து, அனைத்து விவசாயிகளும் டிசம்பர் 1-ஆம் தேதி வரை பயிர்க் காப்பீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2025-26-ஆம் ஆண்டில், பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாட்டில் குறுவை, சம்பா, நவரை பருவத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டதற்கிணங்க, நடப்பாண்டு குறுவைப்பருவத்தில் இத்திட்டத்தில் காப்பீடு செய்ய விவசாயி பதிவு (Farmer Registry) மூலம் வழங்கப்படும் விவசாயிகள் அடையாள எண் (Farmer ID) கட்டாயம் என்பதிலிருந்து ஒன்றிய அரசால் விலக்களிக்கப்பட்டது.

இந்நிலையில், தேசிய பயிர் காப்பீட்டு வலைதளத்தில், சம்பா நெற்பயிர் காப்பீடு செய்ய 2025, செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் 15 ஆம் தேதிவரை காலநிர்ணயம் செய்யப்பட்டு பதிவு நடைபெற்று வந்தது. எனினும் தொடர் மழை, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் போன்றவற்றால் சம்பா நெற்பயிர் காப்பீடு தாமதமான காரணத்தால், விவசாயிகளின் கோரிக்கைக்கிணங்க தமிழ்நாடு அரசு எடுத்த தொடர் முயற்சிகளால் 2025 நவம்பர் 30-ஆம் தேதி வரை ஒன்றிய அரசால் கால நீட்டிப்பு செய்யப்பட்டது.

இதுநாள்வரை, 31.33 லட்சம் ஏக்கர் பரப்பில் சம்பா நெற்பயிர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு, 7.95 லட்சம் விவசாயிகளால் 19.06 லட்சம் ஏக்கர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது மொத்த சாகுபடி பரப்பில் 61 சதவீதமாகும். இது கடந்த ஆண்டைவிட 1 இலட்சம் ஏக்கர் கூடுதலாகும். மேலும், இந்த நீட்டிக்கப்பட்ட காலத்தில் 66 ஆயிரம் விவசாயிகளால் 1.63 இலட்சம் ஏக்கர் சம்பா நெற்பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

எனினும், 2025 நவம்பர் 25 ஆம் தேதி முதல் சம்பா நெற்பயிர் காப்பீடு செய்ய விவசாயிகள் அடையாள எண் (Farmer ID) கட்டாயம் என்று ஒன்றிய அரசால் மீண்டும் அறிவிக்கப்பட்டதால், விவசாயிகள் அடையாள எண் பெற்ற நில உரிமைதாரர்கள் தவிர, குத்தகைதாரர்கள், கோயில் நில சாகுபடியாளர்கள் போன்ற விவசாயிகள் பதிவு செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசால் எடுக்கப்பட்ட சீரிய முயற்சியின் காரணமாக, 2025- 2026 ஆம் ஆண்டு சம்பா மற்றும் நவரை பருவ பயிர்களை காப்பீடு செய்ய விதிகளை தளர்வு செய்து ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

எனவே, 2025 நவம்பர் 30-ஆம் தேதி வரை காப்பீடு செய்ய காலநிர்ணயம் செய்யப்பட்ட பயிர்களை இதுவரை காப்பீடு செய்யாத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் 2025 டிசம்பர் 1-ஆம் தேதிக்குள் பதிவு செய்து பயனடையுமாறு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

மேலும், நில உரிமையுள்ள அனைத்து விவசாயிகளும் உடனடியாக இ-சேவை மையத்தில் விவசாயி பதிவு (Farmer Registry) மூலம் வழங்கப்படும் விவசாயிகள் அடையாள எண் (Farmer ID) பெற்றுக்கொள்ளுமாறு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

மேலும், பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில், 2024-2025 ஆம் ஆண்டிற்கான இழப்பீட்டுத் தொகையாக ரூ.794 கோடி ஒப்பளிக்கப்பட்டு இதுவரை, 4 லட்சம் விவசாயிகளின் வங்கிக்கணக்குகளில் ரூ.697 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இழப்பீட்டுத்தொகை ஒன்றிய அரசின் பங்குத் தொகையான ரூ.67 கோடி பெறப்பட்டவுடன் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் தெரிவித்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் அடையாள எண் பெறுவதில் விலக்கு - டிச.1 வரை பயிர்க் காப்பீடு செய்ய அனுமதி!
Cylcone Ditwah updates: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை 14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in