

தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் 5 ஆண்டுகள் நிறைவு செய்திருந்தால்தான் பணிக்கொடை (Gratuity) கிடைக்குமா அல்லது அதற்கும் குறைவான ஆண்டுகள் பணியாற்றினால் கிடைக்குமா என்பது குறித்து சற்று தெளிவாகப் பார்ப்போம்.
கிராஜுவிட்டி என்றால் என்ன?
கிராஜுவிட்டி (Gratuity) அல்லது பணிக்கொடை என்பது ஒரு தொழிலாளர் ஒரு நிறுவனத்தில் பல ஆண்டுகள் பணி செய்திருந்தால், அந்த ஊழியர் ஓய்வு பெறும்போதோ அல்லது இடையில் நிறுவனத்திலிருந்து வெளியேறும்போதோ அந்த நிறுவனம் அல்லது நிறுவனத்தின் உரிமையாளரால் வழங்கப்படுவது பணிக்கொடை.
தனியாரால் நிர்வகிக்கப்படும் சுரங்கங்கள், தொழிற்சாலைகள், துறைமுகங்கள், மருத்துவமனைகள், தோட்டங்கள் உள்ளிட்டவற்றில் பணியாற்றும் தொழிலாளர்களுக்காக 1972-ம் ஆண்டு பணிக்கொடை சட்டத் திருத்த மசோதா கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
கிராஜுவிட்டி விதிகள் என்னென்ன?
ஒரு தொழிலாளர் ஒரு நிறுவனத்தில் 5 ஆண்டுகள் பணியை நிறைவு செய்திருந்தால் அவர் பணிக்கொடை பெறுவதற்கு தகுதியானவர் என்று விதிமுறை இருக்கிறது. 5 ஆண்டுகளுக்கும் குறைவாக பணியாற்றி இருந்தால் பணிக்கொடை பெற தகுதியில்லை. ஆனால், 2025 நவம்பர் 21-ம் தேதி முதல் புதிய தொழிலாளர் விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன. அதில் கிராஜுவிட்டி தொடர்பாக பல்வேறு புதிய திருத்தங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
அதன்படி, குறிப்பிட்ட கால ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் (fixed term employees) ஊழியர்களின் ஒப்பந்தம் முடிவடையும்போது, அவர்கள் ஓராண்டு கால சேவையை நிறைவு செய்திருந்தால், அவர்களுக்குப் பணிக்கொடை வழங்க வேண்டியது இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட கால ஒப்பந்தம் அல்லாத ஊழியர்களுக்கு (non-fixed-term employee) சமூகப் பாதுகாப்புச் சட்டத்தின்படி, 5 ஆண்டுகள் பணியாற்றி நிறைவு செய்த பிறகு பணிக்கொடை வழங்கப்பட வேண்டும்.
புதிய தொழிலாளர் சட்டத்தின்படி, குறிப்பிட்ட கால ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்கள் ஓர் ஆண்டு பணியாற்றி தங்களின் ஒப்பந்தம் முடிந்தாலே நிறுவனத்திடமிருந்து பணிக்கொடை பெறத் தகுதியுடையவர்கள்.
ஆனால், பணிக்கொடை என்பது விகிதாச்சார (pro rata) அடிப்படையில் கணக்கிட்டு வழங்கப்படும். அதாவது ஒப்பந்த காலத்துக்கு ஏற்ப அவர்களுக்கு விகித அடிப்படையில் பணிக்கொடை வழங்கப்படும்.
பணிக்கொடைக்கு வரிவிதிப்பு இருக்கிறதா?
ஓர் ஊழியர் தனது பணிக்காலம் முடிந்து பெறும் கிராஜுவிட்டி ரூ.20 லட்சம் வரை இருந்தால் கருணை அடிப்படையில் அதற்கு வரிவிலக்கு அளித்திருந்தது மத்திய அரசு. ஆனால், சமீபத்திய திருத்தத்தின் அடிப்படையில், அந்தப் பணிக்கொடை மதிப்பு ரூ.25 லட்சமாக உயர்த்தி, மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆதலால், கிராஜுவிட்டி தொகையாக ரூ.25 லட்சம் வரை பெறும் ஊழியருக்கு எந்த வரிவிதிப்பும் இல்லை.
கிராஜுவிட்டி எவ்வாறு கணிக்கிடப்படுகிறது?
மத்திய அரசு வகுத்துள்ள விதிகளின்படி, பணிக்கொடை பெறுவதற்கு ஓர் ஊழியர், ஒரு நிறுவனத்தில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தொடர்ச்சியாகப் பணியாற்றி முடித்திருக்க வேண்டும். இதற்கு குறைவாக பணியாற்றினால் பணிக்கொடை பெற தகுதியற்றவர்.
ஓர் ஊழியர் 6 ஆண்டுகள் 6 மாதங்கள் பணியாற்றி இருந்தால், அது 7 ஆண்டுகளாகவும், அதுவே 6 ஆண்டுகள் 4 மாதங்களாக இருந்தால் 6 ஆண்டுகளாகவும் கணக்கில் கொள்ளப்படும்.
இதன்படி, ஓர் ஊழியர் ஒரு நிறுவனத்தில் ஓய்வு பெறும்போது அல்லது விலகும்போது கடைசியாக பெற்ற அடிப்படை ஊதியம், அகவிலைப்படி ஆகியவற்றை சேர்த்து, ஆண்டுக்கு 15 நாட்கள் வீதம், பணியாற்றிய ஆண்டுகள் ஆகியவற்றை பெருக்கி வரும் தொகையை 26-ல் வகுத்தால் கிடைக்கும் தொகையே (ஊதியம் + அகவிலைப்படி x 15நாட்கள் x பணியாற்றிய ஆண்டுகள்) / 26 கிராஜுவிட்டியாகும்.
ஓர் ஊழியர் ஓய்வு பெற்றபின், அல்லது விலகியபின் அடுத்த 30 நாட்களுக்குள் கிராஜுவிட்டி பலன்களை நிறுவனம் வழங்கலாம்.
நீதிமன்றங்களின் இரு வேறு மாறுபட்ட தீர்ப்பு
சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றமும், கர்நாடக உயர் நீதிமன்றமும் கிராஜுவிட்டி தொடர்பாக இரு வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளன.
அதில், மேட்டூரைச் சேர்ந்த மேட்டூர் பியர்ட்ஷெல் நிறுவன வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கிராஜுவிட்டி தொடர்பாக அளித்த தீர்ப்பில், ‘ஓர் ஊழியர், 4 ஆண்டுகளை நிறைவு செய்து, 5-வது ஆண்டில் 240 நாட்கள் பணியாற்றி இருந்தாலே 5 ஆண்டுகள் பணி நிறைவு செய்தவராக கருதப்படுவார்.
வாரத்துக்கு 6 நாட்கள் அடிப்படையில் 240 நாட்கள் என்பது 5ஆண்டு நிறைவு செய்ததாக எடுத்துக்கொள்ள முடியும். அவ்வாறு நிறைவு செய்திருந்தால் அவருக்கு கிராஜுவிட்டி வழங்கலாம்’ எனத் தெரிவித்துள்ளது.
கர்நாடக உயர் நீதிமன்றம் வேறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆல்வாஸ் இன்ஸ்ட்டியூட் ஆஃப் எஞ்சினியரிங் அன்ட் டெக்னாலஜி நிறுவனம் தொடர்பான வழக்கில் வழங்கிய தீர்ப்பில், ‘ஊழியர்கள் நிறுவனத்தில் இருந்து தாமாக முன்வந்து விலகும்போதுகூட அவர்கள் 5 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றி நிறைவு செய்திருக்க வேண்டும், அப்போதுதான் கிராஜுவிட்டி பெறத் தகுதியானவர்கள்’ எனத் தெரிவித்துள்ளது.
வல்லுநர்கள் சொல்வதென்ன?
இரு உயர் நீதிமன்றங்களின் மாறுபட்ட தீர்ப்பு குறித்து வல்லுநர்கள் கூறும்போது, “ஒரு நிறுவனத்தில் 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக பணியாற்றி நிறைவு செய்யும் ஊழியர்தான் கிராஜுவிட்டி பெறத் தகுதியானவர். ஆனால், இரு உயர் நீதிமன்றங்களின் வேறுபட்ட தீர்ப்புகள் பணிக்கொடைக்கான தகுதி குறித்த மாறுபட்ட விளக்கங்களுக்கும், முரண்பாட்டுக்கும் வழிவகுத்துள்ளது. எனவே, பாதுகாப்பான அணுகுமுறை என்பது, 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக பணியாற்றி முடிப்பது என அறிவுறுத்தப்படுகிறது” என்றனர்.
இதற்கிடையே கிளியர் டேக்ஸ் நிறுவனம் வெளியிட்ட விளக்கத்தில், ‘ஓர் ஊழியர் 4 ஆண்டுகள் நிறைவு செய்து, 5-வது ஆண்டில் 240 நாட்கள் பணியாற்றி முடித்தாலே கிராஜுவிட்டி பெறத் தகுதியானவர், 240 நாட்கள் என்பது 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக பணியாற்றியதாக எடுக்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளது.