

துபாய்: ஈரான் மீதான அமெரிக்க, இஸ்ரேல் தாக்குதலால் துபாய் விமான நிலையத்துக்கு தினந்தோறும் ரூ. 2 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவது தெரியவந்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் அதிரடித் தாக்குதலை கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கிய நிலையில், ஈரானும் இஸ்ரேல் மற்றும் வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது பதில் தாக்குதலைத் தொடங்கியது.
ஜோர்டான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியது. ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான யுரேனியத்தை செறிவூட்டி வருவதாகக் குற்றம்சாட்டி இந்தத் தாக்குதலை அமெரிக்காவும், இஸ்ரேலும் மேற்கொண்டுள்ளன.
இந்தப் போர்ப் பதற்றம் காரணமாக டிஎக்ஸ்பி என்று அழைக்கப்படும் துபாய் விமான நிலையத்துக்கு வரும் விமானங்களும், புறப்படும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் துபாய் விமான நிலையத்துக்கு தினந்தோறும் ரூ.2,000 கோடி இழப்பு ஏற்பட்டுவருகிறது.
தினமும் துபாய் விமான நிலையத்துக்கு 2.60 லட்சம் பயணிகள் வந்து செல்வர். தற்போது போர்ப்பதற்றம் காரணமாக துபாய் விமானநிலையம் வெறிச்சோடிக் கிடக்கிறது. இதனால் விமான நிலையத்துக்கு தினந்தோறும் ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
2023-ம் ஆண்டில் மட்டும் 8.7 கோடி பயணிகள் துபாய் விமான நிலையத்துக்கு வந்து சென்றுள்ளனர். அதேபோல் 2025-ம் முதல் காலாண்டில் மட்டும் துபாய் விமான நிலையத்துக்கு 2.34 கோடி பயணிகள் வந்து சென்றுள்ளனர்.
அப்படிப் பார்த்தால் சராசரியாக தினமும் 2.60 லட்சம் முதல் 2.70 லட்சம் பயணிகள் துபாய் விமான நிலையத்துக்கு வந்து செல்கின்றனர். கடந்த ஜனவரி மாதம் 3-ம் தேதி மட்டும் 3.24 லட்சம் பயணிகள் இந்த விமான நிலையத்துக்கு வந்து சென்றுள்ளனர்.
தற்போதைய போர்ப் பதற்றம் காரணமாக விமான நிலையம் கடந்த சில நாட்களாக ஆள், அரவமின்றி காணப்படுகிறது. இதனால் விமானநிலையத்துக்கு கிடைக்கும் விமானநிலைய கட்டணங்கள், பயன்பாட்டுக் கட்டணங்கள், வாடகை, டூட்டி ஃப்ரீ விற்பனைக் கூடங்கள் மூலம் வரும் வருவாய் முற்றிலும் நின்றுவிட்டது.
உலகெங்கிலும் இருந்து துபாய்க்கு வரும் அனைத்து சர்வதேச விமான சேவைகளும் நிறுத்தப்பட்டு விட்டதால் துபாய் விமான நிலையத்துக்கு முற்றிலும் வருவாய் நின்றுவிட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.