

புதுடெல்லி: இந்தியாவின் எல்பிஜி உள்நாட்டு உற்பத்தி ஒரு மாதத்துக்குள் 40 சதவீதத்தில் இருந்து 60% ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகத்தின் இணைச் செயலர் சுஜாதா சர்மா கூறும்போது, ‘‘இந்தியாவிடம் போதுமான கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளது. நமது சுத்திகரிப்பு நிலையங்கள் அவற்றின் முழுத் திறனில் இயங்கி வருகின்றன. திரவ மயமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவின் (எல்பிஜி) உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளது. இது நமது தேவையில் கிட்டத்தட்ட 60 சதவீதத்தைப் பூர்த்தி செய்கிறது” என்றார்.
சமீபத்திய தரவுகளின்படி, 2025-26-ம் ஆண்டில் இந்தியாவின் வருடாந்திர எல்பிஜி நுகர்வு 3.3 கோடி டன்களாக இருந்தது. பிப்ரவரி 28-ல் வெடித்த மேற்கு ஆசியப் போர் காரணமாக ஏற்பட்ட விநியோகத் தடைகளால், மார்ச் மாதத்தில் எல்பிஜி நுகர்வு கடுமையாகக் குறைந்துள்ளதாக மாதாந்திர தரவுகள் காட்டுகின்றன. போருக்கு முன்பு, இந்தியா தனது எல்பிஜி தேவையில் 60 சதவீதத்தை இறக்குமதி மூலம் பூர்த்தி செய்தது. இதில் பெரும்பகுதி மேற்கு ஆசியாவில் இருந்து, குறிப்பாக கத்தாரில் இருந்து இறக்குமதியானது.
எல்பிஜி நுகர்வு ஜனவரியில் 30 லட்சம் டன்னாகவும், பிப்ரவரியில் 28 லட்சம் டன்னாகவும் இருந்தது. இது மார்ச் மாதத்தில் 23.79 லட்சம் டன்னாகக் குறைந்தது. இது ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 26.6% சரிவாகும். ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவில் இருந்தும் எல்பிஜியை இந்தியா இறக்குமதி செய்கிறது.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல்கள் செல்லும் பாதையைத் ஈரான் தடுத்ததைத் தொடர்ந்து எல்பிஜி இறக்குமதி கடுமையாகச் சரிந்தது. இதனால், 33.2 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு 100 சதவீத எல்பிஜி விநியோகத்தை உறுதி செய்து, வர்த்தக சிலிண்டரின் விநியோகத்தை மத்திய அரசு குறைத்தது. இதற்கிடையில், எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்குமாறு இந்திய சுத்திகரிப்பு நிலையங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.