வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.60 உயர்வு

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.60 உயர்வு
Updated on
1 min read

ஈரான் - இஸ்ரேல் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிசக்தி விலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ எடையுள்ள மானியம் இல்லாத சிலிண்டரின் விலை சிலிண்டருக்கு ரூ.60 உயர்த்தப்பட்டுள்ளது. 

இதன் மூலம் சென்னையில் ஒரு சிலிண்டரின் விலை 928.50 ரூபாயாகவும், டெல்லியில் 913 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. கொல்கத்தா,மும்பை போன்ற மற்ற பெருநகரங்களிலும் இதே போன்ற விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடையுள்ள சிலிண்டர்களின் விலை 115 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் வணிக சிலிண்டரின் விலை 2,043.50 ரூபாயாக உயர்ந்துள்ளது, இது உணவகங்கள் மற்றும் சிறு தொழில்களில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்க வழிவகுக்கும் என்று அஞ்சப்படுகிறது. 

போர் சூழலால் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில் பொதுமக்கள் அதிக அளவில் சிலிண்டர்களை முன்பதிவு செய்வதைத் தவிர்க்க, இரண்டு சிலிண்டர் முன்பதிவுகளுக்கு இடையே 21 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் அமல்படுத்தியுள்ளன. 

குறிப்பாகக் கொல்கத்தா போன்ற நகரங்களில் முன்பதிவு வழக்கத்தை விட 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏதும் இல்லை என்றும், அடுத்த 50 நாட்களுக்குத் தேவையான கையிருப்பு இருப்பதாகவும் உறுதியளித்துள்ளார். 

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.60 உயர்வு
தேர்தல் தேதி அறிவிக்கட்டும்... சுதந்திரமாக சூறாவளி பிரச்சாரத்துக்குத் தயாராகும் விஜய்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in