சென்னை: சர்வதேச வேளாண் வர்த்தக மாநாடு மற்றும் கண்காட்சி வரும் செப்.17 முதல் 20 வரை சென்னையில் நடைபெற உள்ளதாக கிராப் நெக்ஸா அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் ராஜேஷ் கண்ணா வெளியிட்ட தகவல்: ‘இந்திய வேளாண்மையை உலக சந்தையுடன் இணைக்கும் மிகப்பெரிய சர்வதேச வேளாண்மை வர்த்தக மாநாடு மற்றும் கண்காட்சி வரும் செப்.17 முதல் 20 வரை சென்னையில் நடைபெற உள்ளது.
வேளாண்மை, உணவு பதப்படுத்துதல், ஏற்றுமதி, தொழில்நுட்பம், முதலீடு மற்றும் உலகளாவிய சந்தை வாய்ப்புகளை ஒரே தளத்தில் கொண்டு வரும் இந்த மாநாடு, இந்திய விவசாயிகளுக்கும் வேளாண் தொழில் நிறுவனங்களுக்கும் புதிய வளர்ச்சி வாயில்களை உருவாக்கும்.
இந்த மாநாட்டில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த விவசாயிகள், விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்கள், வேளாண் ஆராய்ச்சியாளர்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள், வேளாண் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள், முதலீட்டாளர்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், அரசுத் துறை அதிகாரிகள், சர்வதேச வர்த்தக பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
சர்வதேச வேளாண்மை மற்றும் வேளாண் வணிக கண்காட்சி, உலகளாவிய வாங்குபவர் – விற்பனையாளர் சந்திப்பு, வேளாண் ஏற்றுமதி மற்றும் சர்வதேச வர்த்தக கருத்தரங்குகள், உணவு பதப்படுத்தல் மற்றும் மதிப்புக்கூட்டல் தொழில்நுட்ப அரங்கம், வேளாண் ஸ்டார்ட்அப் மற்றும் புதுமை கண்டுபிடிப்பு கண்காட்சி, துல்லிய வேளாண்மை தொழில்நுட்ப மையம், முதலீட்டு மற்றும் தொழில் இணைப்பு நிகழ்ச்சிகள், சர்வதேச பிரதிநிதிகளுடன் நேரடி சந்திப்பு ஆகியவை மாநாட்டின் முக்கிய அம்சங்களாக இருக்கும்.
இதனால், புதிய தொழில்நுட்பங்களை அறியும் வாய்ப்பு, ஏற்றுமதி சந்தை தொடர்புகள், மதிப்புக்கூட்டப்பட்ட விவசாயம் குறித்த விழிப்புணர்வு, அரசுத் திட்டங்கள் மற்றும் நிதி வாய்ப்புகள் பற்றிய தகவல்கள், தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் நேரடி தொடர்பு, புதிய தொழில் மற்றும் வருமான வாய்ப்புகள் ஆகிய பலன்கள் விவசாயிகளுக்கு கிடைக்க உள்ளன.
இந்த மாநாடு தமிழகத்தை சர்வதேச வேளாண் வர்த்தக மையமாக உயர்த்தும் முக்கிய முயற்சியாக அமையும். விவசாயிகள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில் முனைவோர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அழைக்கப்படுகிறார்கள்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.