‘ஈரானின் இரும்புச் சுவர்’ ஆக உருவெடுத்த கதை... யார் இந்த அலிரேசா பெய்ரன்வந்த்?

‘ஈரானின் இரும்புச் சுவர்’ ஆக உருவெடுத்த கதை... யார் இந்த அலிரேசா பெய்ரன்வந்த்?
Updated on
2 min read

பெல்ஜிய வீரர்கள் தொடர்ந்து அட்டாக்கிங் ஆட்டத்தை தொடுத்துக் கொண்டிருந்தனர். உலகக் கோப்பையின் முக்கியமான ஆட்டங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட அந்தப் போட்டியில், கோல் அடிக்க அவர்கள் பலமுறை முயன்றனர். ஆனால், ஒவ்வொரு முறையும் அவர்களின் கனவுகளுக்கும் கோல் கம்பத்துக்கும் நடுவே ஒரு மனிதர் சுவராக நின்றார்.

ஜூன் 21 அன்று லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற 2026 உலகக் கோப்பை குரூப் ஆட்டத்தில், பெல்ஜியத்தின் அட்டாக் ஆட்டத்தை முறியடித்து ஈரானுக்கு விலைமதிப்பற்ற ஒரு புள்ளியைப் பெற்றுத் தந்தார் அலிரேசா பெய்ரன்வந்த். ஏழு முக்கியமான சேவ்களை நிகழ்த்திய அவரது ஆட்டம், உலக கால்பந்து ரசிகர்களின் கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளது. இன்று பலர் அவரை ‘ஈரானின் இரும்புச் சுவர்’ என்று அழைக்கிறார்கள்.

ஆனால், உலகக் கோப்பை மேடையில் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் பாராட்டைப் பெறும் இந்தக் கோல்கீப்பர், ஒரு காலத்தில் தெஹ்ரானின் தெருக்களில் இரவைக் கழித்தவர். இரண்டு கின்னஸ் சாதனைகளுக்குச் சொந்தக்காரரான அவரது வாழ்க்கைப் பயணம், வெறும் கால்பந்து வெற்றிக் கதை மட்டுமல்ல; கனவை கைவிட மறுத்த ஒரு மனிதனின் போராட்ட வரலாறு.

மலைகளில் தொடங்கிய கனவு

ஈரானின் லோரெஸ்தான் மாகாணத்தில் நாடோடி வாழ்க்கை வாழ்ந்த குடும்பத்தில் பிறந்தார் பெய்ரன்வந்த். சிறுவயதில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது நண்பர்களுடன் சேர்ந்து மலைகளுக்கு இடையே கற்களை எறிந்து விளையாடுவார். பின்னாளில் உலக சாதனைகளைப் படைக்க உதவிய கை வலிமைக்கு அந்த விளையாட்டும் ஒரு காரணமாக அமைந்தது.

ஆனால், கால்பந்தின் மீது இருந்த அவரது காதலை குடும்பம் ஏற்றுக்கொள்ளவில்லை. குறிப்பாக அவரது தந்தை, விளையாட்டால் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியாது என்று நம்பினார். ஒரு கட்டத்தில் பெய்ரன்வந்தின் கையுறைகளையும் கால்பந்து உடைகளையும் கிழித்தெறிந்ததாக அவர் பின்னர் நினைவுகூர்ந்துள்ளார்.

இளவயதிலேயே வீட்டை விட்டு வெளியேறிய பெய்ரன்வந்த், கால்பந்து வீரராக வேண்டும் என்ற கனவுடன் தெஹ்ரானுக்குச் சென்றார். ஆனால் அங்கே அவருக்காக யாரும் காத்திருக்கவில்லை.

பல நாட்கள் தெருக்களிலும் மைதானங்களின் வெளியேயும் தூங்கினார். ஒரு முறை அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது, வழியாகச் சென்றவர்கள் அவரைப் பிச்சைக்காரன் என்று நினைத்து அருகில் சில்லறை பணத்தை வைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

வாழ்க்கையை முன்னெடுக்க அவர் கார்கள் கழுவினார், பீட்சா கடையில் வேலை செய்தார், இரவு நேரங்களில் தெருக்களைச் சுத்தம் செய்யும் பணிகளிலும் ஈடுபட்டார்.

பசி, வறுமை, தனிமை என பல சவால்கள் இருந்தபோதும், அவரது கனவு மட்டும் மாறவில்லை. கால்பந்து அவருக்கு ஒரு விளையாட்டு அல்ல; அந்தச் சூழலிலிருந்து வெளியேறுவதற்கான ஒரே வழியாக இருந்தது.

பல இளம் வீரர்களைப் போல திறமை மட்டும் பெய்ரன்வந்திடம் இல்லை; அந்தத் திறமையை உயிரோடு வைத்திருக்க வேண்டிய பிடிவாதமும் இருந்தது. அதுவே அவரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தியது.

உலக சாதனைகளும் உலகக் கோப்பையும்

அந்த விடாமுயற்சியே அவரை ஈரானின் முன்னணி கோல்கீப்பர்களில் ஒருவராக மாற்றியது. 2016-ஆம் ஆண்டு கால்பந்தை 61.0026 மீட்டர் தூரம் எறிந்து கின்னஸ் உலக சாதனை படைத்தார். 2019-ஆம் ஆண்டு 78.014 மீட்டர் தூரம் டிராப் கிக் அடித்து மற்றொரு கின்னஸ் சாதனையையும் தனது பெயரில் பதிவு செய்தார்.

2018 உலகக் கோப்பையில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் பெனால்டியை தடுத்து உலக அளவில் கவனம் பெற்ற அவர், இந்த 2026 உலகக் கோப்பையில் பெல்ஜியத்துக்கு எதிராக மீண்டும் ஒருமுறை தனது தரத்தை நிரூபித்துள்ளார்.

கனவை கைவிட மறுத்த மனிதன்

அலிரேசா பெய்ரன்வந்தின் கதையை ஏழு சேவ்கள், இரண்டு கின்னஸ் சாதனைகள் அல்லது ரொனால்டோவின் பெனால்டி சேவ் ஆகியவற்றால் மட்டும் அளவிட முடியாது. ஏனெனில், அவரது மிகப் பெரிய சாதனை கால்பந்து மைதானத்தில் நிகழ்ந்ததல்ல.

ஒரு காலத்தில் தெருக்களில் இரவைக் கழித்த இளைஞன், இன்று உலகக் கோப்பை மேடையில் ஒரு நாட்டின் நம்பிக்கையைக் காக்கும் கோல்கீப்பராக நிற்கிறான்.

பெல்ஜியத்தின் ஷாட்களை அவர் தடுத்திருக்கலாம். ஆனால் உண்மையில், வறுமை, தோல்வி, அவநம்பிக்கை ஆகியவை தனது கனவைத் தடுக்க அனுமதிக்காமல் போராடிய மனிதனின் கதையைத்தான் அலிரேசா பெய்ரன்வந்த் இன்று உலகுக்கு நினைவூட்டுகிறார்.

‘ஈரானின் இரும்புச் சுவர்’ ஆக உருவெடுத்த கதை... யார் இந்த அலிரேசா பெய்ரன்வந்த்?
‘வீட்டிலும் செய்யுங்களேன்...’ - மைதானத்தை சுத்தம் செய்த ஜப்பானிய ரசிகர்களிடம் கோரும் பெண்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in