

லடாக்: பூமிக்கு அடியில் உள்ள வெப்ப நீருற்றுகளில் பெறப்படும் தண்ணீரில் இருந்து வரும் நீராவி மூலம் மின் உற்பத்தி செய்வதுதான் புவி வெப்ப மின் நிலையம். இதற்காக பூமிக்கு அடியில் புவி வெப்ப ஆற்றல் கிணறுகள் தோண்டப்படும். இவற்றின் மூலம் 2 விதங்களில் சுடு தண்ணீரை பெற முடியும்.
ஒன்று பூமிக்கு அடியில் உள்ள சுடு தண்ணீர் மற்றும் நீராவியை உறிஞ்சி மின் உற்பத்தி செய்வது. மற்றொன்று குளிர்ந்த நீரை இந்த கிணற்றுக்குள் செலுத்தி அதை சுடு தண்ணீராக மீண்டும் பெறுவது. இந்த சுடு தண்ணீர், டேங்கரில் சேமித்து வைத்து அதில் இருந்து வெளியேறும் நீராவி மின் காந்த சுழலிகளைச் சுழற்றி மின் உற்பத்தி செய்யும்.
இந்த புவி வெப்ப நீரூற்றுகள் 14,000 அடி உயரத்தில் உள்ள லடாக்கின் பூகா பள்ளத்தாக்கு பகுதியில் அடையாளம் காணப்பட்டன. அங்கு 1,000 மீட்டர் ஆழத்தில் 2 புவி வெப்ப ஆற்றல் கிணறுகள் தோண்டப்பட்டன. இவை நாட்டின் முதல் புவிவெப்ப ஆற்றல் கிணறுகள்.
இங்கு ஒரு மெகாவாட் புவி வெப்ப மின் நிலையம் அமைக்கப்படவுள்ளது. இத்திட்டத்தை தொடங்கி வைத்த லடாக் துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா கூறும்போது, ‘‘புவிவெப்ப கிணறுகள் செயல்பாட்டுக்கு வந்திருப்பது தூய்மையான எரிசக்தி பயணத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்’’ என்றார்.