இ20 பெட்ரோலில் ஈரப்பதம், குளோரைடு இருப்பதாக கூறுவதில் உண்மையில்லை: எண்ணெய் நிறுவனங்கள்

குறியீட்டுப் படம்

குறியீட்டுப் படம்

Updated on
1 min read

புதுடெல்லி: இ20 பெட்ரோலில் ஈரப்பதம், குளோரைடு இருப்பதாக கூறப்பட்டது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அதில் உண்மை ஏதும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இ20 பெட்ரோலில் ஈரப்பதமும் குளோரைடும் இருப்பதாக சமீபத்திய ஊடகச் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் நாடு தழுவிய அளவில், முழு இ20 பெட்ரோல் விநியோகத்தையும் உள்ளடக்கிய ஒரு தீவிர சோதனையை மேற்கொண்டன.

இதில் எரிபொருளின் தரம், நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்குள் சீராகவே உள்ளது என்பதை இந்த ஆய்வின் முடிவுகள் மீண்டும் உறுதிப்படுத்துகின்றன.

அறிவியல் பூர்வமான சோதனைகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆய்வுகளின் அடிப்படையில், இ20 பெட்ரோலில் எந்தவிதமான சிக்கலும் இல்லை என்பதை ஆதாரங்கள் காட்டுகின்றன.

எரிபொருளின் தரத்துக்கு மிக உயர்ந்த முன்னுரிமை அளிப்பதாகவும், வாகனத்தின் செயல்திறனையோ அல்லது நுகர்வோர் நம்பிக்கையையோ பாதிக்கக்கூடிய எந்தவொரு பிரச்சனையும் அதில் கண்டறியப்படவில்லை என்றும் எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

பெட்ரோல் கலவையில் பயன்படுத்தப்படும் எத்தனால் குறித்த கடுமையான குளோரைடு தர விவரக்குறிப்பை மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. அத்துடன், இதை உறுதி செய்வதற்காக ஒரு உயர் கண்காணிப்பு அமைப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள சுத்திகரிப்பு நிலையங்கள், மதுபான ஆலைகள், கிடங்குகள், முனையங்கள், சில்லறை விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட விநியோகச் சங்கிலியின் பல இடங்களில் குளோரைடு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம், விநியோகத்தில் தரம் சீராகப் பராமரிக்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது.

ஏற்கெனவே நிறுவப்பட்ட தர உறுதி நெறிமுறைகளுக்குக் கூடுதலாக, எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் ஒவ்வொரு சில்லறை விற்பனை நிலையத்திலும் தினமும் 8 முதல் 12 முறை நீர் உட்புகுதல், அடர்த்தி சோதனைகளை நடத்துவதன் மூலம் கண்காணிப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளன.

மேலும், பல்வேறு இடங்களில் நடமாடும் எரிபொருள் தரச் சோதனை ஆய்வகங்களும் நிறுவப்பட்டுள்ளன. அதே நேரத்தில், மிக உயர்ந்த தர உறுதிப்பாட்டை உறுதி செய்வதற்காக, சோதனை முடிவுகள் எரிபொருள் ஆய்வகங்கள் மூலம் சரிபார்க்கப்படுகின்றன.

மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, நுகர்வோர் இ20 பெட்ரோலை நம்பிக்கையுடன் தொடர்ந்து பயன்படுத்தலாம். ஏனெனில், எண்ணெய் சந்தைப்படுத்தல் கட்டமைப்பு மூலம் வழங்கப்படும் இந்த எரிபொருள், பரிந்துரைக்கப்பட்ட தர விவரக் குறிப்புகளுக்கு இணங்குவதோடு, விநியோகச் சங்கிலியின் ஒவ்வொரு கட்டத்திலும் நுகர்வோர் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் வலுவான தர உறுதியைக் கொண்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p>குறியீட்டுப் படம்</p></div>
“கர்நாடக அமைச்சரவையில் நிச்சயம் ஒரு பெண் இடம்பெறுவார்” - முதல்வர் சிவகுமார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in