

புதுடெல்லி: க்யூஆர் கோட் மூலம் பணம் செலுத்தும் யுபிஐ நடைமுறையை இந்தியா அறிமுகம் செய்தது. இது சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், பிரான்ஸ், மொரீசியஸ், நேபாளம், பூட்டான், இலங்கைக்கு விரிவு படுத்தப்பட்டது. தற்போது 9-வது நாடாக கம்போடியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதற்காக நேஷனல் பேமன்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, ஏசிஎல்இடிஓ பேங்க் பப்ளிக் லிமிடெட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் கம்போடியா செல்லும் இந்திய சுற்றுலா பயணிகள் அங்குள்ள 45 லட்சம் கடைகளில் பணம் செலுத்தலாம். இதற்கு முன்பு வெளிநாடு செல்லும் சுற்றுலா பயணிகள், இந்திய ரூபாயை வெளிநாட்டு கரன்சிகளாக மாற்றி செலவு செய்வதில் பல சிரமங்களை அனுபவித்தனர்.
தற்போது யுபிஐ முறை பல நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டு வருவதால், இந்தியர்களுக்கு பணம் செலுத்துவது எளிதாகி உள்ளது. அவர்கள் வாங்கும் பொருட்களுக்கு நிகரான ரூபாயின் மதிப்பை அறிந்து வங்கி கணக்கு மூலமாக பணம் செலுத்தலாம்.
தற்போது முதல் கட்டமாக இந்தியர்கள் கம்போடியாவில் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்ததாக கம்போடியா மக்கள் இந்தியாவில் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் முறை கொண்டுவரப்படவுள்ளது.