

புதுடெல்லி: ஓலா, ஊபர், ராபிடோவுக்கு மாற்றாக டெல்லியில் ஜனவரி 1 முதல் பாரத் டாக்ஸிகள் இயக்கப்பட உள்ளன.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: இந்தியாவின் முதல் கூட்டுறவு வாடகை கார் சேவையான 'பாரத் டாக்ஸி’ ஜனவரி 1-ம் தேதி மத்திய அரசால் டெல்லியில் தொடங்கப்பட உள்ளது.
டெல்லி மக்களுக்கு ஓலா, ஊபர், ராபிடோ ஆகிய செயலி அடிப்படையிலான வாடகை கார் சேவைக்கு மாற்றாக அல்லது கூடுதல் சேவையாக இது இருக்கும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துவிட்டன, சஹகார் டாக்ஸி கூட்டுறவு நிறுவனத்தால் இந்த செயலி இயக்கப்படும். இந்த சேவை மூலம் கார், ஆட்டோ ரிக் ஷா மற்றும் பைக்குகள் கிடைக்கும். இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்கு தளம் கொண்ட செல்போன்களில் கிடைக்கும்.
பயணிகள் தங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்து, தாங்கள் புறப்படும் மற்றும் இறங்க வேண்டிய இடங்களை உள்ளிட்டு, பயணத்தை தொடங்கலாம். மேலும் பயணத்தை நிகழ்நேரத்தில் கண்காணிக்கலாம்.
டெல்லி காவல் துறை மற்றும் பிற முகமைகளுடன் ஒருங்கிணைப்பு, சரிபார்க்கப்பட்ட ஓட்டுநர்களை பணியமர்த்துதல், பயண விவரங்களை பகிர்ந்துகொள்ளும் வசதி என பாதுகாப்பு அம்சங்களை இது கொண்டிருக்கும்.
இந்த செயலி பயன்படுத்த எளிதானது. வெளிப்படையான கட்டண அமைப்பு, பல மொழிப் பயன்பாடு, 24 மணி நேர வாடிக்கையாளர் சேவை போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.
நெரிசல் நேரங்களில் ஓட்டுநர்கள் கட்டுப்பாடு இல்லாமல் கட்டணங்களை உயர்த்த முடியாது. ஓட்டுநர்கள் பயணத்தை மறுப்பது, முன்பதிவை ரத்து செய்வது போன்ற அன்றாடப் புகார்களை கையாளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாரத் டாக்ஸி செயலி, ஓட்டுநர்களுக்குச் சொந்தமான கூட்டுறவு அமைப்பை அடிப்படையாகக் கொண்டது. இதனால் ஓட்டுநர்களுக்கு அதிக வருமானம் மற்றும் சிறந்த பணிச்சூழல் கிடைக்கும். ஓட்டுநர்கள் கட்டணத்தில் 80 சதவீதம் வரை நேரடியாகப் பெறுவார்கள். இதற்காக ஒரு மாதாந்திர கடன் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
பாரத் டாக்ஸி செயலியில் 56,000 ஓட்டுநர்கள் பதிவு செய்துள்ளனர். டெல்லியில் சோதனை ஓட்டம் நிறைவடைந்துள்ளது. குஜராத்தின் ராஜ்கோட்டில் இதேபோன்ற சோதனை நடைபெற்று வருகிறது. அங்கு பிப்ரவரி 1-ம் தேதி இது தொடங்கப்பட வாய்ப்புள்ளது. இது படிப்படியாக 20-க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.