

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மகசூல் அதிகரிப்பால், 1.50 கோடி தேங்காய் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளது. இதனால், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் மூலம் தென்னை விவசாயிகளுக்கு மறுவாழ்வு கொடுக்க அரசு முன்வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா, மலர்களுக்கு அடுத்ததாக விவசாயிகள் அதிகளவில் தென்னை சாகுபடியில் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள், வியாபாரிகள், சிறுதொழில் முனைவோர் என பலர் நேரடியாகவும், மறைமுகமாகவும் தென்னை விவசாய தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக பெய்த மழையால், வழக்கத்தை விட மகசூல் அதிகரித்து, தேங்காய் விற்பனை வெகுவாக சரிந்துள்ளது.
வாழ்வாதாரம் பாதிப்பு: இதுகுறித்து அரசம்பட்டியைச் சேர்ந்த தென்னை உற்பத்தி மற்றும் ஆராய்ச்சியாளர் கென்னடி கூறும்போது, மாவட்டத்தில் 17 ஆயிரம் ஹெக்டேரில் 35 லட்சம் தென்னை மரங்கள் உள்ளன. இந்த மரங்களில் 45 நாட்களுக்கு ஒரு முறை விவசாயிகள் சுமார் 1.50 கோடி தேங்காய்கள் அறுவடை செய்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக தென்னை விவசாயிகள் வருவாய் இழப்பினை சந்தித்து வருகின்றனர்.
இதற்கு முக்கிய காரணம் வறட்சியால் காய்ப்பு குறைந்தும், மழையால் காய்கள் மகசூல் அதிகரித்தும் இருப்பதே. தற்போது தேங்காய் சராசரியாக டன் ரூ.20 ஆயிரம் என விற்பனையாகிறது. ஒரு தேங்காய் ரூ.8-க்கு விற்பனையாகிறது. இதில் தேங்காய் மரத்தில் இருந்து பறிப்பு, உரிப்பு கூலியாக ரூ.4 வரை செலவாகிறது. மீதமுள்ள ரூ.4 பராமரிப்பு பணிகளுக்கு செலவாகிறது.
5 கோடி தேங்காய்: இந்நிலையில், நிகழாண்டில் மகசூல் அதிகரித்தும், வடமாநிலங்களில் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக நுகர்வு குறைந்துள்ளதால், 45 நாட்களில் 1.50 கோடி தேங்காய்கள் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளது. இந்த தேங்காய் அதிகபட்சம் 60 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். அதன்பிறகு கொப்பரையாக மாறும். இல்லாவிட்டால் கெட்டுப்போகும்.
மகசூல் அதிகரிப்பால், அடுத்த 6 மாதங்களில் 5 கோடி தேங்காய் தேக்கமடைந்து, வீணாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு தேங்காய்களை கொள்முதல் செய்து, கொப்பரையாக்க முன்வர வேண்டும். இல்லாவிட்டால் விவசாயிகள் தென்னை மரங்களை அழிக்கும் நிலைக்கு தள்ளப்படுவர்.
மதிப்பு கூட்டிய பொருட்கள்: தேங்காய்கள் மூலம் பால் பவுடர், இளநீர் பவுடர், சிப்ஸ், எண்ணெய் உள்ளிட்ட 170-க்கும் மேற்பட்ட மதிப்புகூட்டப்பட்ட பொருட்களை தயார் செய்யலாம். இதற்காக அரசு பெரிய அளவில் தேங்காய் எண்ணெய் தொழிற்சாலை தொடங்க வேண்டும். இதன் மூலம் மகசூல் குறைந்தாலும், அதிகரித்தாலும் விவசாயிகளுக்கும், அரசுக்கும் வருவாய் கிடைக்கும். மதிப்புகூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்து தென்னை விவசாயிகளுக்கு மறுவாழ்வு கொடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மகசூல் அதிகரிப்பால், அடுத்த 6 மாதங்களில் 5 கோடி தேங்காய் தேக்கமடைந்து, வீணாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு தேங்காய்களை கொள்முதல் செய்ய வேண்டும்.